“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது.
‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி.பழனிவேல் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக கலக்குகிறார்.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத்.
மேலும் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – இனியன் J.ஹாரீஸ், இசை – அம்ரிஷ், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – C.E.சண்முகம், சண்டை பயிற்சி இயக்கம் – சூப்பர் சுப்பராயன், நடனப் பயிற்சி இயக்கம் – அசோக்ராஜா, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், இணை தயாரிப்பு – பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு – V.பழனிவேல்.
“கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குநர் வி.சி.வடிவுடையான், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த ’பாம்பாட்டம்’ படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம், இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு விஷயமாக இருக்கப் போகிறது என்கிறது படக் குழு.
இந்தப் படம் பற்றி இயக்குநர் வி.சி.வடிவுடையான் பேசும்போது, “பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் இந்த ‘பாம்பாட்டம்’ படம். அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள்தான் படத்தின் கதை. கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் இதன் கதை டிராவல் ஆகும்.
இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் சூழ்நிலை என நிறைய மெனக்கெடல் இருந்தது. மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம்.
படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். குடும்பமாக வந்து ரசிக்கும் அளவுக்கு படத்தில் சுடச்சுட சுவாரஷ்யங்கள் இருக்கும். போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர, சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்…” என்றார்.
இந்தப் ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
விரைவில் பாம்பட்டத்தை திரையரங்கில் காணலாம்.