ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நேதாஜி பிரபு தானே தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்`.
மருந்துகளை ‘ஒளடதம்’ என்றுதான் பண்டைய காலத்தில் தமிழில் அழைப்பார்கள். இத்திரைப்படம் மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியிருப்பதால் இந்தத் தலைப்பை வைத்துள்ளார்கள்.
இப்படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` என்று பெயர் பொறிக்கப்பட்ட 3 லட்சம் பேனாக்களை இத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர்.
அதற்கான அறிமுக விழா நேற்று மாலை பிரசாத் லேபில் நடந்தது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான பேனா வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் இந்தப் பேனாவைத் தரும்போது கூடவே, `தமிழா தமிழில் கையெழுத்திடு` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக் குழு.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது “இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறு படங்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி சிறு படங்களின் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். இது நல்ல விஷயம். அதேபோல அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயம் தெரிந்தவர்களிடம் பேசும்போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படிப் பெயர் சொல்லும்போது பெயரை உச்சரிக்கும் போது அன்பு கூடுகிறது. நெருக்கமும் வெளிப்படும்.
இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. ஆனால், இங்கு இருக்கிறது.
வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல நம் தலைக்கு மேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியை கோழிக் குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இன்று தமிழை வளர்ப்பதைவிட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. காரணம் தமிழன். தமிழனாக இல்லை. எனவேதான், தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.
இன்று மருந்தும், செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை. மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்….” என்றார் இயக்குநர் பேரரசு.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “நான் முதலில் இருந்தே தமிழில்தான் கையெழுத்து போட்டு வருகிறேன். காசோலைகளிலும் கூட தமிழில்தான் கையெழுத்து போடுவேன். ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா…? நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் இன்றைக்கு உலகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறார்கள். அங்கே ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடித்தால்தான் நம்மைப் போன்றவர்களால் ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும்..
அண்மையில் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. கம்போடியாவின் தலைநகரத்தில் இறங்கியபோது என் பாஸ்போர்ட்டில சீல் வைக்க இடமில்லை என்று சொல்லி என்னை அந்த நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். சீல் வைக்க 2 பக்கங்கள் இருந்தும் அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.
இதனால் வேறு வழியில்லாமல் நான் சென்னையில் இருக்கும் என் வீட்டாருக்கு போன் மூலம் தகவலைச் சொல்லி ரிட்டர்ன் டிக்கெட் போடச் சொல்லி திரும்பி வந்தேன். அங்கேயிருக்கும்போது என்னை ஏதோ குற்றவாளியை போல டிரீட் செய்தார்கள். விமானத்தில் கொண்டுவிடும்போதுகூட அப்படித்தான் என்னை நடத்தினார்கள்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் நான் நடந்ததைச் சொன்னபோது அவர்களும் பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு அதான் சீல் வைக்க இடம் இருக்கே. ஏன் அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்று என்னையவே திருப்பிக் கேட்டார்கள்.
அங்கே அவர்களிடத்தில் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் நான் பேசினேன். அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசி.. கம்யூனிகேஷன் பிராப்ளமாகிவிட்டது.
பிரான்ஸ் நாட்டிலெல்லாம் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும். வெறும் கையெழுத்தை தமிழில் எழுதுவதால் மட்டுமே தமிழ் மொழி வளர்ந்துவிடாது…” என்றார் கே.பாக்யராஜ்.
படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும்போது, “நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
2013-ல் ஒரு மருந்தின் மூலப் பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது..? எப்படி அந்தத் தடை நீக்கப்பட்டது என்பது பற்றி யோசித்தேன். அப்போதுதான் இந்தக் கதை உருவாகியது.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம் உள்ள விழிப்புணர்வு, நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடையே இல்லை. எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை.
நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட்கள் படமெடுத்துள்ளோம். படத்தில் 5 சண்டை காட்சிகள், 2 பாடல் காட்சிகள் உள்ளன.
‘ஒளடதம்’ என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மூணு லட்சம் பேனாக்களை திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய ஊர்களின் திரையரங்குகளில் பேனாவை வழங்க உள்ளோம். இதுவும் ஒரு புதிய முயற்சிதான். இதில் எங்களுக்கு பெரும் சந்தோஷம்.
ஒரு விஷயத்தை நான் இங்கே பதிவு செய்தாக வேண்டும். இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக்கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. த
கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ மெம்பராகி உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறார்கள். .அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று தேடி, ஓடி வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தை மட்டும் மிகச் சரியாக கறந்து விடுகிறார்கள்.
அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும். என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால்தான் சினிமா உருப்படும்…” என்றார் நாயகனும், படத் தயாரிப்பாளர், நேதாஜி பிரபு.
இவ்விழாவில் படத்தின் நாயகியான சமீரா, நடிகர் விஷ்ணுபிரியன், படத்தின் வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன், நடிகை பாலாம்பிகா, விநியோகஸ்தர் எம்.சி.சேகர், இணைத் தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பி.ஆர்.ஓ. யூனியன் செயலாளர் பெரு.துளசி பழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.