பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஒண்டிக்கட்ட’.
‘தெனாவெட்டு’, ‘குரங்கு கைல பூமாலை’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நேகா நடித்துள்ளார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.
மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி, இசை – பரணி, பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா, படத் தொகுப்பு – விது ஜீவா, நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா, சண்டை பயிற்சி – குபேந்திரன், கலை – ராம், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், தயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி, எழுத்து, இயக்கம் – பரணி.
`ஒண்டிக்கட்ட´ படத்தின் இயக்குநரும், பிரபல இசையமைப்பாளருமான பரணி படம் பற்றிப் பேசியபோது, “நான் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக என் பயணத்தை துவக்கி 18 வருடங்களாகிவிட்டது.
இதுவரை எனக்கு கிடைத்த அனுபவங்களையும், நான் கற்றுத் தேர்ந்த விஷயங்களையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.
நான் இசைத் துறையிலிருந்து இயக்கத் துறைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறேன்.
பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்த மணப்பெண் மாதிரி. இரண்டு இடத்து பெருமையையும் காப்பாற்றியாக வேண்டும் என்கிற கட்டாயத்துடன்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
அதனால்தான் என் பிறந்த வீட்டு சொந்தங்களாகிய இசையமைப்பாளர்கள் இசையை வெளியிட, என் புகுந்த வீட்டு சொந்தங்களான இயக்குநர்கள் அந்த இசையைப் பெற்றுக் கொண்டார்கள்.
இந்தப் படத்தில் கிராமத்து நாகரீகத்தை பதிவிட்டிருக்கிறேன். படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே நிச்சயம் பெரிதாகப் பேசப்படுவார்கள்.
நாம் பிறந்த போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் பிறக்கிறோம். போகும்போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் போகப் போகிறோம். இதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.
இந்தப் படத்தினை விக்ரம் ஜெகதீஷ், ஆர்.தர்மராஜ், நேகா இந்த மூவரும் தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரங்கள். ஆர்.தர்மராஜுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
என் கற்பனையை சிறப்பாக வடிவமைக்க தயாரிப்பாளர்கள் ஆர்.தர்மராஜ் கே.கே.சுரேந்தர் சுமித்ராபரணி ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். மண் சார்ந்த வாழ்க்கையையும், மக்களையும் இதில் பிரதிபலித்து இருக்கிறோம். ‘ஒண்டிக்கட்ட’ படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் பரணி.