பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட.’
இந்தப் படத்தை பிரபல இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.
‘தெனாவெட்டு’, ‘குரங்கு கைல பூ மாலை’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் கேக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ், இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.
மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ட்ராயன், மதுமிதா, ‘ஹலோ’ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி, இசை – பரணி, பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா, படத் தொகுப்பு – விதுஜீவா, நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா, சண்டை பயிற்சி – குபேந்திரன், கலை – ராம், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், எழுத்து, இயக்கம் – பரணி.

படம் பற்றி இயக்குநர் பரணி பேசும்போது, “நான் இதுவரையிலும் 40 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளேன். ‘பெரியண்ணா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘பார்வை ஒன்றே போதும்’, ‘சார்லி சாப்ளின்’, ‘சுந்தரா டிராவல்ஸ்’ போன்ற படங்களின் பாடல்கள் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.
ஒரு நல்ல கதை அமைந்ததால் ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஒரு உண்மைக் கதையை நல்ல திரைக்கதை மூலம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சூழல் அப்படியொரு நிலையை ஏற்படுத்தி விடுகிறது. அதைதான் கதையாக்கி இருக்கிறோம்.
‘தையமுத்து’, ‘நல்லதம்பி’, ‘பஞ்சவர்ணம்’ இந்த மூன்று கதாப்பாத்திரங்களும் கதையின் உயிர் நாடி. ‘முல்லை’, ‘கோதண்டம்’ இருவரும் கவுண்டமணி – செந்தில் மாதிரி தோன்றுவார்கள். காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சை, பாபநாசம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் இயக்குநர் பரணி.









