மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் மூத்த நடிகர் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், திருமதி கிருத்திகா உதயநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பேபி சாதன்யா, பழனி, பாடகர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப குழுவினருடன் அறிமுக இயக்குநர் மைக்கேல் அருண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் இப்படத்தில் பணியாற்றிய மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலில் ‘நிசப்தம்’ படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கும் ‘ராகம் ஆடியோஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரசாத் வரவேற்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, “இந்த ‘நிசப்தம்’ படத்தின் இயக்குநரான மைக்கேல் அருண் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவரின் வேண்டுகோளுக்காக இந்தப் படத்தைப் பார்த்தேன். பார்த்தவுடன் இப்படத்தினை வெளியிடவேண்டும் என்று எண்ணினேன். அத்துடன் இதுவரை ஆடியோ நிறுவனத்தைத் தொடங்காத நான், இந்தப் படத்திற்காகவே ‘ராகம் ஆடியோஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதுவே இப்படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்…” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ஜேஸீஸ் பேசும்போது, “இது என்னுடைய முதல் படம். நானும், இயக்குநர் அருணும் பத்தாண்டு கால நண்பர்கள். காத்திருந்து இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி பேசும் போது, “என்னுடைய கணவர், என்னுடைய சகோதரர்கள், கணவர் வீட்டார், என்னுடைய நண்பர்கள், தோழிகள், குடும்ப உறவினர்கள் என பலரும் ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்ததால்தான் இப்படத்தைத் தயாரிக்க முடிந்தது. அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம்…” என்றார்.
இயக்குநர் அறிவழகன் பேசும்போது, “இந்த படத்தைப் பார்த்தேன். ரொம்ப ஆழமான, அழகான படமாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போதைய சமூகத்திற்கு இது மிகவும் தேவையான படம் என்றே சொல்லலாம்.
இன்றைக்கு ஒரு தயாரிப்பாளரைப் பார்த்துக் கதை சொல்லப் போனால், உங்க கதைக்கு ‘யூ’ சர்டிபிகேட் கிடைக்குமா இல்லை… ‘யூ/ஏ’ கிடைக்குமா என்றுதான் முதலில் கேட்கிறார்கள்.. படம் முடிந்து சென்சாருக்கு போய் ‘யூ’ சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டால் அப்பொழுதே படத்தின் வெற்றியை முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் ரசிகர்கள்தானே ஒரு படத்தை வெற்றியடைய வைக்கிறார்கள்..?
இந்த நேரத்தில் நான் வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால், ‘யூ’-வோ ‘யூ/ஏ’-வோ என்ன சர்ட்டிபிகேட் வேண்டுமென்றாலும் கொடுங்கள். ஆனால் இந்த ‘நிசப்தம்’ மாதிரியான சமூக விழிப்புணர்வோடு, இந்தச் சமுதாயத்துக்குத் தேவைப்படுகிற துணிச்சலான விஷயத்தை முன் வைத்திருக்கும் படங்களுக்கு நிச்சயமாக ‘யூ’ சர்ட்டிபிகேட் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
அதோடு இது போன்ற படங்களுக்கு வரி விலக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் இந்த மைக்கேல் அருண் மாதிரியான இளம் திறமைசாலி இயக்குநர்கள் தொடர்ச்சியாக நல்ல படமாக எடுக்க முடியும். இந்த கோரிக்கையை இந்த மேடையில் உங்கள் ஆதரவோடு முன் வைக்கிறேன்…” என்றார்.
முன்னதாக படத்தின் டிரைலரும், ஒரு பாடல் காட்சியும் திரையிடப்பட்டன. விழாவில் பார்வையற்றவர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர். விழாவின் இறுதியில் இயக்குநர் மைக்கேல் அருண் நன்றி கூறினார்.
முன்னதாக படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலரை விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வெளியிட படக் குழுவினர் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.