full screen background image

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’ படம்..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’ படம்..!

AYNGARAN INTERNATIONAL நிறுவனத்தின் தயாரிப்பாளரான K.கருணாமூர்த்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படமொன்றை தயாரிக்கிறார்.

நிறங்கள் மூன்று’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புதிய படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அதர்வாவுடன் சரத்குமார் மற்றும் ரகுமான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இசை – ஜேக்ஸ் பிஜோய், ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத் தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பு – சிவசங்கர், சண்டை இயக்கம் – டான் அசோக், ஆடை வடிவமைப்பாளர் – அசோக் குமார், ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதாகரன்-Sync Cinema ஹரிஹரன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா-டைமண்ட் பாபு, ரேகா, நிர்வாகத் தயாரிப்பு – சுந்தர்ராஜன்.K., புகைப்படங்கள் – கார்த்திக் சீனிவாசன்-சுரேஷ், டிசைன்ஸ் – கபிலன் செல்லையா.

பிரபல இளம் இயக்குநரான கார்த்திக் நரேன் இந்தப் படத்தை எழுதி, இயக்கவிருக்கிறார்.

இந்தப் புதிய படம் குறித்து தயாரிப்பாளர் கருணாமூர்த்தி  பேசும்போது, “இந்த ‘நிறங்கள் மூன்று’ போன்றதொரு அழகான கதாப்பாத்திரங்களும், மிகச் சிறந்த திரைக்கதையும் கொண்ட அட்டகாசமான  படத்தை தயாரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இன்றைக்கு Ayngaran International நிறுவனம் 35 வருடத்தில் கால் பதிக்கிறது. இது எங்கள் நிறுவனத்தின் 25-வது படைப்பாகும். எனவே பெருமைப்படுமளவிலான ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்க நினைத்தேன். அது இந்த ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் நரேன் இந்தப் படத்தின் திரைக்கதையை விவரித்தபோது, இந்தக் கதையின் கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.  அவர் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இந்தக் கதாப்பாத்திரங்களுக்கு யார் பொருத்தமானவர் என்று யோசிக்க ஆரம்பித்து, பல நடிகர்களின் பெயர்கள் என் மனதில் ஓட ஆரம்பித்தது.

நான் நினைத்த நடிகர்களின் பெயரையே கார்த்திக் நரேனும் சொன்னது மிகவும் ஆச்சரியமான தருணம். அதர்வா முரளி, சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் சிறந்த நடிகர்கள். அவர்கள் எப்போதும் அழுத்த மிகுந்த கதைகளிலும்,  வணிக ரீதியில் லாபம் தரும் படைப்புகளிலும் தங்கள் திறனை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.

இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்தக் கலைஞர்களின் திறமையை,  அடுத்த கட்டத்திற்கு எடுத்து  செல்வார்.

தனது முதல் அறிமுக திரைப்படமான ‘துருவங்கள் பதினாறு’ மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு.

குறுகிய காலத்தில், திரைத்துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து, அவர் தனது  மகத்தான திறமையை நிரூபித்துள்ளார். இந்த ‘நிறங்கள் மூன்று’ படம் இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான்  உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என்பதற்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு ஹைப்பர் லிங்க்-டிராமா-த்ரில்லர், மேலும் வலுவான பாத்திரங்கள், சுவாரஸ்ய திரைக்கதை,  எதிர்பாரா திருப்பங்களுடன் கார்த்திக் நரேனின் அழுத்தமான முத்திரை இப்படத்தில் இருக்கும்…” என்றார்.

இந்த ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 5-ம் தேதி, புதன் கிழமையன்று இனிதே துவங்கவுள்ளது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும்  2022 மார்ச் மாதம் முடியும் வகையில்  திட்டமிடப்பட்டுள்ளது.

Our Score