மூன் ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘நிமிர்’.
இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா, “நான் இதுவரை நான்கு மலையாள திரைப்படங்களை தயாரித்திருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாக தமிழில் படம் தயாரித்திருக்கிறேன். அதுவும் 93 படங்கள் இயக்கிய லெஜண்ட் பிரியதர்ஷன் சார் இயக்கியிருக்கும் படம் இது. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. இந்த ‘நிமிர்’ படமும் சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.
படத்தின் நாயகியான பார்வதி நாயர் பேசுகையில், “என்னுடைய கேரியரில் இந்த ‘நிமிர்’ திரைப்படம் எனக்கு மிக, மிக முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். உதயநிதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். என்னைவிட அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், நடிகர்களுடன் வேலை செய்தது என் பாக்கியம்…” என்றார்.
இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் மகேந்திரன் பேசும்போது, “ஒரு நாள் பிரியதர்ஷன் சார் என்னை அழைத்து, அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சொன்னார். இதுவரை நான் நடித்த எந்த படத்தையும் அவர் பார்த்ததில்லையாம். அதுவும் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன். நாம் பெரிய நடிகர்களோடு நடிக்கும்போது அவர்களையே வியந்து பார்த்துக் கொண்டிருப்போம், அந்த மாதிரி இந்த படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் சாரை வியந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.
‘தெறி’ படத்துக்கு பிறகு நிறைய வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் எனக்கு வந்தன, அவற்றை ஒத்துக் கொள்ளவில்லை, பிரியதர்ஷன் சாருக்காகவே இந்த படத்தை ஒப்புக் கொண்டேன்…” என்றார்.
படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மகேந்திரன் ஸாருடன் இந்த படத்தில் நான் நடித்தது என் அதிர்ஷ்டம். பிரிவியூவில் படத்தை பார்த்த என் மனைவி, ‘உன் கேரியரில் மனிதன் படத்துக்கு பிறகு அதைவிட ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறாய், ஆனாலும் ஃபகத் பாசில் செயததில் பாதியைத்தான் செய்திருக்கிறாய்’ என சொன்னார். அவர் கொடுத்த இந்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தை பார்த்த பலரும் பிரியதர்ஷன் சாரின் சிறந்த படமாக ‘நிமிர்’ வந்திருக்கிறது என்றார்கள். ஜனவரி 26-ம் தேதியன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம்…” என்றார்.
இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “கடந்த சில வருடங்களாக நான் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் நீண்ட இடைவெளிவிட காரணம்.. இதுவரையிலும் சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு நல்ல பெயரை பெற்றிருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதால்தான்.
நான் 100 படங்களை தொட எனக்கு இன்னும் 8 படங்கள்தான் தேவையாய் இருக்கு. அதனால் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். நாம் எடுக்கும் படம் முதலில் நமக்குப் பிடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டுமே படம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு தேசிய இயக்குநராக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.
கடந்த 20 வருடங்களாகவே ‘ஏன் கலை படங்களாகவே எடுக்குறீர்கள்..? கமர்சியல் படம் ஏன் எடுப்பதில்லை..?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் கடைசியாக இயக்கிய ‘காஞ்சிவரம்’, ‘சில சமயங்களில்’ – இந்த இரண்டுமே கலைப் படங்கள்தான். அந்தக் குறையை தீர்க்க அமைந்ததுதான் இந்த ‘நிமிர்’ திரைப்படம்.
மலையாள ஒரிஜினல் படமான ‘மகேஷிண்ட பிரதிகார’த்தின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, திரைக்கதையை மாற்றி இதில் கொஞ்சம் கமர்சியலாக பண்ணியிருக்கிறோம்.
முழுக்க, முழுக்க தென்காசி நகரத்தின் பின்னணியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளைஞனின் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும்படி படமாக்கியிருக்கிறோம்.
இந்தக் கதைக்கு சாதாரணமான ஒரு முகம் தேவைப்பட்டது. உதயநிதி நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. அவரின் சாதாரண பையன் போன்ற தோற்றத்தை வைத்துதான் அவரை தேர்வு செய்தேன். ‘படத்தில் நடிக்கவே வேண்டாம். கேரக்டராக மட்டும் நடந்து கொள்’ என உதயநிதியிடம் சொன்னேன். ஆனால், அவர் கேரக்டராகவே மாறி விட்டார்.
படத்தில் உதயநிதி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘நேஷனல்’ செல்வம். போட்டோகிராபராக, யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் வாழும் அந்த கிராமத்து இளைஞன், அவனுக்கு ஏற்பட்ட ஒரு அவமானத்திற்கு பழிவாங்கும்வரை, காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்து பழி வாங்குவதுதான் படத்தின் கதை.
நடிகர்கள் சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தார்கள். கிராமத்தையும், கிராமத்து வாழ்க்கையையும் அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். 36 நாட்களில் இந்தப் படத்தை முடித்தோம். அதில் 28 நாட்கள் செருப்பே அணியாமல் நடித்தார் உதயநிதி.
மகேந்திரன் சார் டப்பிங் முடித்த பிறகு, ‘ஃபகத் பாசிலைவிட உதயநிதி சிறப்பாக செய்திருக்கிறார்’ என சொன்னார். ‘முள்ளும் மலரும்’, ‘உதிரி பூக்கள்’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ ஆகிய படங்கள் வெளியான காலத்தில் மகேந்திரன் சாரிடம் உதவியாளராக சேர நான் பெரிதும் முயற்சி செய்தேன், ஆனால், அது நடக்கவில்லை. இப்போது அவருடன் வேலை பார்த்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
இந்த படத்தில் நிறைய இளைஞர்களோடு வேலை பார்த்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இளைஞர்களிடம் வேலை செய்யும்போது, நமக்குப் பிடித்தது போன்று நிறைய கேட்டு வாங்க முடியும். அதில் நமக்கு தேவையானவற்றை உபயோகித்து கொள்ளலாம். அஜனீஷ், டர்புகா சிவா என்ற இரண்டு இளைஞர்கள்தான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். வைரமுத்துவும், தாமரையும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வின்செண்ட், இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன்…” என்று பெருமையோடு சொல்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.