தமிழகத்தின் தற்போதைய ‘டார்லிங்’ நிக்கி கல்ரானிதான். தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ படத்தில் பேயாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் வெகுவாக பெற்ற நிக்கி தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘கோ-2’ திரைப்படம் மூலம் பத்திரிக்கையாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அனைவரும் இவரின் அழகையும், நடிப்பையும் பார்த்து வியந்து போய், இவரை பெரிதும் பாராட்டியுள்ளனர்.
R.S.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சரத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். லியான் ஜேம்ஸ் இசையமைத்திற்கும் இந்த படத்தின் பாடல்கள் ரேடியோவிலும், ஐ டியுன்சிலும் தொடர்ந்து முதல் வரிசையைப் பிடித்திருக்கிறது.
“படத்திற்கு நல்ல துவக்கமாக அமைந்திருக்கும் இந்த பாடல்களின் வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தேர்தல் களத்தில் பிஸியாக உள்ள தமிழகத்தில் மே 13-ம் தேதி வெளியாகும் இந்த ‘கோ-2’ திரைப்படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
தேர்தல் நெருங்கி வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசியலையும், ஊடகத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘கோ-2’ திரைப்படம் நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு படத்தில் நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு ஆர்வம் கிடையாது. அப்படி புதுப் புது வேடங்களையும், பல பல கதாப்பாத்திரங்களையும் நான் தேடி சென்றபோது, எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்புதான் இந்த ‘கோ-2’ திரைப்படம்.
இந்தப் படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடிக்கும் நான், அந்த கதாப்பாத்திரம் தத்ரூபமாக அமைய பல நிஜ பத்திரிகையாளர்களை பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும்விதம், அவ்வளவு ஏன்.. அவர்கள் எப்படி தங்களின் மைக்கை பிடிக்கிறார்கள் என்பது முதல்கொண்டு அனைத்தையும் கற்று கொண்டேன்.
அழகு மட்டுமே ஒரு நடிகைக்கு ஆதாரமாய் இருக்க முடியாது, கடின உழைப்பும், நடிப்புத் திறமையும் மிக மிக முக்கியம். மே 13-ம் தேதி படம் வெளிவரும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..” என்று அழகு தமிழில் கூறுகிறார் ‘டார்லிங்’ நிக்கி கல்ரானி.