கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் படமாக உருவாகி வெற்றி பெற்ற படம் ‘யார்.’ அந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவர்தான் கண்ணன்… பின்னர் ‘யார் கண்ணன்’ என்ற பெயரில் பல படங்களை இயக்கினார்… இயக்குநர் மகேந்திரனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட அவர் நல்ல பாடலாசிரியரும் கூட.
அவர் எழுதிய “அள்ளித் தந்த வானம் அன்னையல்லவா… சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா” என்ற பாடல் இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
தற்போது நடிகராகவும் பரிமாணித்திருக்கும் ‘யார்’ கண்ணன் இப்போதும் பல படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார்..
‘யார்’ கண்ணன் – ஜீவா தம்பதிகளின் வளர்ப்பு மகள் காயத்திரி நடிகையாக அறிமுகமாகிறார்.
சில விழாக்களில் காயத்திரியை பார்த்த பலர் ஏதோ நடிகை போலிருக்கிறது என்று காயத்திரியின் காதுபட பேசப் போக நடிக்க வேண்டும் என்கிற ஆவல் தனக்குள் அதிகமாகி விட்டதாக சொல்கிறார்.
16 வயது என்பது சினிமா அறிமுக கதாநாயகிகளுக்கு சரியான வயது என்கிற நடைமுறையை புரிந்து கொண்டு காலடி எடுத்து வைத்திருக்கிறார் காயத்ரி. 18 வயதுக்கு முன்பு அறிமுகமானால் குழந்தை நட்சத்திர கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் காரணமாய் இப்போதே அறிமுகமாக துடிக்கிறார்.
அப்பா யார் கண்ணன் ஒரு பிரபல இயக்குனர். அம்மா ஜீவா பிரபல டான்ஸ் மாஸ்டர். இதனால் காயத்திரி திறமைசாலியாகத்தான் இருப்பார் என்று நம்பலாம்.. நல்ல பட நிறுவனம் நல்ல டீம் இருந்தால் நாளையே மேக்கப் போட தயார் என்கிறார் காயத்திரி.
இவர் பிரபலமான நடிகையாவார் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம் இவரை போட்டோ எடுத்தது ஸ்டில்ஸ் ரவி அவர்கள். ஸ்டில்ஸ் ரவி எடுத்த புகைப்படத்தின் மூலம்தான் இன்றைய நட்சத்திரங்கள் பலர் வெளிச்சத்திற்கு வந்தார்கள் என்பதுதான் உண்மை.