பிரபல எழுத்தாளரும், வெற்றி பெற்ற பல திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா எழுதி இயக்கும் முதல் திரைப்படம் ‘மைலாஞ்சி.’
‘கன்னி மாடம்’ படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை வென்ற ஸ்ரீராம் கார்த்திக் இயற்கை புகைப்பட கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘கோலிசோடா 2’ படத்தில் நடித்த கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களைக் கொண்ட கூட்டணி இந்த படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கை கோர்த்துள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத் தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மையான படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பாளராக பங்காற்றியுள்ளார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.
திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம் பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியிருந்தார். அவர் இயக்கும் முதல் முழு நீள திரைப்படம் இதுவாகும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ‘மைலாஞ்சி’ என்ற தலைப்பு தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ என மாற்றப்பட்டுள்ளது.
தலைப்பு மாற்றம் குறித்து பேசிய இயக்குநர் அஜயன் பாலா, ‘‘திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும், இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால், எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச் சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் விதத்தில் மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு அழகான காதல் கதையாக மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.
பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்.
படத்தின் கதையை பெரிதும் விரும்பி பாராட்டு தெரிவித்த இசைஞானி இளையராஜா, படத்தின் நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். அவரது இசையில் உருவான பாடல்கள் அடுத்த வருடம் முதல் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கும்” என்றார்.
இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது.










