இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.
எப்போதும் தனது படங்களில் புதுமையை தரும் இயக்குனர் ஜனநாதன் இப்படத்தில் இளம் இசையமைப்பாளர் வர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தப் படம் பற்றியும் தனது இசையுலகப் பயணம் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் இசையமைப்பாளர் வர்ஷன்.
“லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து பின் இந்திய பாரம்பரிய இசையை சென்னை இசை கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் சாருக்கு பிடித்திருந்தது. இதனால்தான் எனக்கு ‘‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் வாய்ப்பளித்தார்.
ஒரு புதுமுகத்திற்கு தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திற்கோ, UTV போன்ற பெரிய நிறுவனத்தின் படத்தில் வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி வந்து என்னை இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார்.
படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்கு பெரும் சவாலாக அமைந்தது. இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும், ஜனநாதன் சாரின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொண்டு இசையமைத்தேன். படத்தின் பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளது.
ஒரு இயக்குனரிடம் வேலை புரிவது மிகவும் புதிதாக இருந்தது. ஒரு தனித்த இசை கலைஞனாய் வேலை செய்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு இசையமைப்பாளர் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும்.
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் என்னை ஒரு இசையமைப்பாளராய் மேலும் மெருகேற்றியது. படத்தின் இசை வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” எனத் தன்னிசையைப் போல் இனிமையுடன் கூறினார் இளம் இசையமைப்பாளர் வர்ஷன்.