‘முன்னோடி’ படத்தை எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது..!
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அழகா்சாமியின் குதிரை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபா் சங்கம்’, ‘தேசிங்கு ராஜா’, ‘மான் கராத்தே’, ‘கயல்’, ‘மாப்பிள்ளை சிங்கம்’, ‘கொடி’ போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தயாரித்த எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரமின் அடுத்த படம் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளரான மதன் தற்போது ‘முன்னோடி’ படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர். கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமண், வினு க்ருதிக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி, இசை – கே.பிரபு ஷங்கர். படத் தொகுப்பு – என்.சுதா, நடனம் – ஏபி.சந்தோஷ், சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி. எழுத்து, இயக்கம் – எஸ்.பி.டி.ஏ.குமார்ளார். தயாரிப்பு – எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால்.
‘முன்னோடி’ படம் பற்றி தயாரிப்பாளா் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதன் கூறும்போது, “நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், சினிமாவில் நம்மால் யாருக்காவது உதவ முடியுமா என்ற நோக்கத்தோடும் என் தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு நடுவேயும், சில படங்களை வெளியிட்டு வருகிறோம்.
அதற்காக சமீபத்தில் 100 படங்களுக்கு மேல் பார்த்தேன். அதில் என்னை அதிகம் பாதித்தது இந்த ‘முன்னோடி’ படம். மிக. மிக நோ்த்தியாகவும், அதிரடியாகவும் விறுவிறுப்பாக படத்தை உருவாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநா் குமார். ‘ரேணிகுண்டா’ படத்தைப் போன்ற களத்தில் மிக அழமான கதையுடன் மிரட்டியிருந்தார்.
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இவ்வளவு அழகான படத்தை எடுத்த அந்தப் புதுமுக இயக்குநரைக் கட்டிப் பிடித்து எனது வாழ்த்தை தெரிவித்த கையுடன் மறுநாளே ‘முன்னோடி படத்தை நானே வெளியிடுகிறேன்’ என ஒப்பந்தம் செய்து கொண்டேன். எல்லோருக்கும் பிடித்த படமாக நிச்சயம் ‘முன்னோடி’ இருக்கும். வெளியிட்டு தேதியை விரைவில் அறிவிப்போம்…” என்றார்.
படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது, “ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற இக்கருத்தை முன் வைத்துதான் இந்த ‘முன்னோடி’ படம் உருவாகியுள்ளது.
படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா..? சூழலால் மாறியவனா..? மாற்றப்பட்டவனா…? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன்.
‘முன்னோடி’ காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்த முழு நீள கமர்ஷியல் படமாக இருந்தாலும் உளவியல் சார்ந்த விஷயங்கள் எந்த இடத்திலும் குறையாமல் இருக்கும். படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு.
‘முன்னோடி’ படம் சென்னையில் நடக்கும் கதை என்றாலும், பிற வட்டார மொழியையும் சில கதாபாத்திரங்கள் பேசுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 120 நாட்கள் நடைபெற்றுள்ளது.
படம் பார்த்ததும் மதன் சார் கட்டிப் பிடித்து பாராட்டினார். அதுவே புதுமுக இயக்குநரான எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக நினைக்கிறேன். மேலும் இன்றுள்ள வியாபார போராட்டத்தில் படம் வெளியாவது என்பது குதிரைக் கொம்பான விஷயம். ஆனால் நான் முதன்முதலில் இயக்கிய முதல் படத்தை ஒரு மிகப் பெரிய நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது என்றால் நிச்சயம் இது என் கொடுப்பினை என்றே நினைக்கிறேன்.
பெரிய நிறுவனம் வெளியிடுவதால் எளிதாக இந்த படம் மக்களிடம் சென்றுவிடும். மக்களிடம் சென்றுவிட்டால் அவர்கள் நிச்சயம் இப்படத்தை வெற்றிப் படமாக்கிவிடுவார்கள். இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் மதன் சாருக்கும், நண்பர் ஜேம்ஸ்க்கும் நன்றி..” என்றார் மிகுந்த சந்தோஷத்துடன்.