full screen background image

“பாலியல் படம் வேறு; ஆபாசப் படம் வேறு..” – போலீஸூக்கே கிளாஸ் எடுத்த ஷில்பா ஷெட்டி

“பாலியல் படம் வேறு; ஆபாசப் படம் வேறு..” – போலீஸூக்கே கிளாஸ் எடுத்த ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களை தயாரித்ததாகவும், இந்த ஆபாசப் படங்களில் நடிக்க வைக்க சில பெண்களை அவர் கட்டாயப்படுத்தியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதமே மும்பை குற்றப் பிரிவு போலீசாருக்கு, மும்பையில் ஆபாசப் படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி சிலர் வெளியிடுகிறார்கள் என புகார் கிடைத்திருக்கிறது.

அதனை அடிப்படையாக கொண்டு தீவிரமாக விசாரித்தபோது இந்த ஆபாச பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது.

அதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்களை திரட்டிய பின்பே போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர். கோர்ட் உத்தரவின்படி போலீஸ் காவலில் இருந்த ராஜ் குந்த்ராவின் காவல் முடிவுக்கு வந்ததால், அவரை நேற்று முன் தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது இந்த வழக்கில் மேலும் பல விஷயங்களை விசாரிக்க வேண்டியிருப்பதாலும், ராஜ் குந்த்ராவின் பணப் பரிவர்த்தனைகள் பற்றி தெரிய வேண்டியுள்ளதாகவும் ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் மும்பை குற்றப் பிரிவு போலீஸார் மனு அளித்தனர். இதையடுத்து ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவலை வரும் 27-ம் தேதிவரையிலும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ராஜ் குந்த்ராவை மும்பை ஜூஹூவில் அவரது வீட்டிற்கு போலீஸார் அழைத்து வந்தனர். வீடு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பைல்களை போலீஸார் கைப்பற்றினர். அதோடு வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் சில மொபைல் ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே நேற்று இரவு ஷில்பா ஷெட்டியிடமும் மும்பை குற்றப் பிரிவு போலீஸார் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது ஷில்பா ஷெட்டி, தனது கணவர் ஒரு அப்பாவி என்றும், இந்த விஷயத்தில் அவர் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் போலீஸாரிடம் வாதாடியிருக்கிறார்.

மேலும், “ஹாட்ஷாட் செயலியில் உள்ள வீடியோக்களின் சரியான தன்மை குறித்து எனக்குத் தெரியாது. ஹாட்ஷாட் செயலிக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்றும் ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, போலீசாரிடம் அவர், “பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட பாலியல் படங்களை மட்டுமே என் கணவர் தயாரித்தார். நிர்வாணக் காட்சிகள் அடங்கிய, ஆபாச படங்களை அவர் தயாரிக்கவில்லை. இந்த இரண்டுக்கும் வேறுபாடு உண்டு..” என்று சொல்லி இவற்றுக்கு இடையிலான வேறுபாட்டையும் விவரித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.

Our Score