தந்தையான நவரச நாயகன் கார்த்திக், மகன் கவுதம் கார்த்திக் ஆகியோரை ஒரே படத்தில் பார்க்க மகிழ்ச்சியான தருணம் வெகு தொலைவில் இல்லை.
மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வரும் ஜூலை 6-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் பாடல்களும், காட்சி விளம்பரங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.
படத்தின் இயக்குநரான திரு படம் பற்றிப் பேசுகையில், “இந்தப் படத்திற்காக பிஸியான நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்த படத்தை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவும், சி.எஸ்.சாமின் இசையும் படத்திற்கு கூடுதலாக சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்றன.
இந்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் துவங்கிய நாள் முதலே மிகவும் positive ஆகவே இருந்து வருகிறது. தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய உத்தியாகட்டும், படத் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகட்டும் ஒவ்வொன்றுமே சிறப்பு.
இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருந்த வித்தைக்காரர் தயாரிப்பாளர் தனஞ்செயன்தான். படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்து வெளியீடுவரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது.
‘மிஸ்டர் சந்திரமௌலி’யில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் பார்வையாளர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும், அவர்கள் செலவழித்த நேரத்தை நிச்சயம் வீணாக்காது..” என்றார் உறுதியான குரலில்.