கௌதம் கார்த்திக், ‘நவரச நாயகன்’ கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை முடிக்கும் கட்டத்தில் உள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்த பாடல்கள் தர வரிசையில் முன்னணியில் இருக்கின்றன.
இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் ரெஜினா கேஸண்ட்ரா. இந்தப் படத்தின் மூலம் தனது திரையுலக கேரியரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறார் ரெஜினா.
படத்தில் அவரின் கவர்ச்சி அவதாரத்துக்காக இடையறாத பெருமழையாக பாராட்டுக்களை பெற்று வரும் வேளையில், அவரே இந்தப் படத்திற்காக முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங்கும் பேசி இருக்கிறார்.
படக் குழுவில் உள்ள அனைவரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டி வரும் இந்த வேளையில் படத்தின் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் இது பற்றி மிக மகிழ்ச்சியோடு பேசினார்.
அவர் கூறும்போது, “ரெஜினா இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் தமிழ் ஸ்க்ரிப்டை படித்ததும், தமிழில் அவரின் மொழி ஆளுமையையும் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டோம்.
அவர் நம்ம சென்னை பொண்ணுதான். சென்னையில்தான் கல்லூரி படிப்பையும் முடித்தார். அவரிடம் ‘ஏன் இதற்கு முன்பு சொந்தக் குரலில் டப்பிங் பேசவில்லை..?’ என்று கேட்டபோது, யாரும் ‘டப்பிங் பேச என்னை இதுவரை அணுகவில்லை’ என்றார்.
ஆனால் இந்தப் படத்தில் ரெஜினா சொந்தக் குரலில் டப்பிங் பேச இயக்குநர் திரு வாய்ப்பு அளித்தார். ரெஜினாவும் எந்தக் குறையும் இல்லாமல் பேசி, எங்களை பிரமிக்க வைத்தார். மேலும் அவரின் கேரக்டருக்கு அவரே டப்பிங் பேசியதன் மூலம், தனது கதாபாத்திரம் முழுமை அடைந்ததாகவும் தெரிவித்தார். படம் ரிலீஸ் குறித்த நல்ல செய்தியை விரைவில் அறிவிக்க உள்ளோம்…” என்றார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.