full screen background image

“அருண் விஜய் இந்தப் படத்தில் நிறைய அடி வாங்கியிருக்கார்” – ‘மிஷன் சாப்டர்-1’ படத்தின் ரகசியம்!

“அருண் விஜய் இந்தப் படத்தில் நிறைய அடி வாங்கியிருக்கார்” – ‘மிஷன் சாப்டர்-1’ படத்தின் ரகசியம்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்-1’.

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதியம் சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, “இந்தப் பொங்கலுக்கு ‘கேப்டன் மில்லர்’, ‘மிஷன் சாப்டர்-1’ என நான் இசையமைத்த எனது இரண்டு படங்களும் வருகிறது.

இயக்குநர் விஜய் என்னுடைய வீட்டில் ஒருவர் போலத்தான். அவருடன் நான் பத்து படங்கள் வேலை செய்துவிட்டேன். என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து பல ஹிட் பாடல்கள் விஜயின் படங்களில்தான் அமைந்தது. எங்கள் காம்பினேஷனில் முத்துகுமார் சாரை மிஸ் செய்கிறோம்.

அருண் விஜய் சாருடன் ‘யானை’, ‘மிஷன் சாப்டர்-1’, அடுத்து பாலா சார் படம் எனத் தொடர்ந்து மூன்று படங்கள் செய்து கொண்டிருக்கிறேன்.  இந்தப் படம் படக் குழுவுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசும்போது, “இந்தப் படத்தில் வேலை பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. ஏனெனில், ஃபைட் மாஸ்டர் விஜய் சாருடனும், ஃபைட்டர் அருண் சாருடனும் வேலைப் பார்த்திருக்கிறேன். முழுக்க, முழுக்க சண்டைப் படமாக விஜய் சாருடன் இரண்டாவது படம் இதை செய்கிறேன்.

பார்வையாளர்கள் படத்தில் நிச்சயம் சண்டையை என்ஜாய் செய்வீர்கள். இந்த சண்டைக்காக நிறைய பயிற்சி எடுத்து கை, கால்களில் அருண் விஜய் சார் அடி வாங்கினார். அந்தக் கட்டோடுதான் இப்போதும் வந்துள்ளார். படக் குழுவினரின் உழைப்புக்காகப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான மஹாதேவன் பேசும்போது, “இது ஒரு நல்ல கதை. என்ன நினைத்து எழுதினேனோ அது அப்படியே விஜய் படமாக எடுத்துள்ளார். அதற்கும் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்கும் நன்றி. முதல்முறையாக தமிழில் நான் வேலை பார்க்கிறேன். இதற்கு முன்பு தெலுங்கில்தான் வேலை பார்த்திருக்கிறேன்.

நான் முதல் முறை தமிழில் எழுதியுள்ள இந்த ஆக்ஷன் கதையில் அருண் விஜய் சார் நடித்திருக்கிறார். அது மிகவும் சந்தோஷம். ஏனெனில், எனக்கு எமோஷனுடன் ஆக்ஷன் கதை எழுதுவது பிடிக்கும். அதை திரையில் சரியான நபர் கொண்டு வந்திருப்பதை நாம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். அருண் விஜய் அதை சரியாக செய்துள்ளார். படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி!” என்றார்.

நடிகர் பரத் கோபன்னா பேசும்போது, “2017-ம் வருடம் விஜய் சாரின் ஒரு படத்தில் நான் நடிப்பதாக இருந்து அது மிஸ் ஆனது. அதில் எனக்கு பெரிய வருத்தம். ஆனால் இப்பொழுது இந்த ‘மிஷன் சாப்டர்-1’ படம் மூலம் அந்த வாய்ப்பு மீண்டும் வந்திருப்பதில் மகிழ்ச்சி.

விஜய் சார் இயக்கத்தில் அருண் விஜய் சாரோட லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. ஏமி, நிமிஷா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தமிழ் பார்வையாளர்கள் படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் அபிஹாசன் பேசும்போது, “இந்தப் படத்தில் அசிஸ்டெண்ட்டாக வேலை செய்யத்தான் போனேன். ஆனால், விஜய் சார் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றி. டிரைய்லரில் நிறைய ஆக்ஷன் இருப்பது போல தோன்றும். ஆனால், அதோடு படத்தில் நிறைய எமோஷன்களும் உள்ளது.  படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

விநியோகஸ்தகர் மற்றும் தயாரிப்பாளரான, ஸ்ரீகோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலன் பேசும்போது, “தமிழ், மலையாளம் என இரு தரப்பு பார்வையாளர்களும் விரும்பிப் பார்க்கும்படியாக இந்தப் படம் வந்துள்ளது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படம் என்றால் தானாகவே ஒரு ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் வந்துவிடுகிறது.

இந்தப் படத்திலும் திறமையான கலைஞர்களும் நடிகர்களும் இருக்கின்றனர். இந்தப் படத்தை வெற்றிப்படமாக பார்வையாளர்கள் மாற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசும்போது, “பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் ‘மிஷன் சாப்டர்-1’ என்பதில் எனக்கு ரொம்பவும் சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம். அதை செய்து கொடுத்த லைகாவுக்கு நன்றி.

நான் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த ‘மிஷன் சாப்டர்-1’ படம்தான் அதிக பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரிப்ட்டை கொடுத்த விஜய்க்கு நன்றி. ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.  

ஏமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் இதில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம்.

லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம். நாலரை ஏக்கரில் மிகப் பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில காரணங்களால் அது சேதமானது. அப்போதுகூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா புரொடக்‌ஷனஸ் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள்.

தொழில் நுட்பக் குழுவும் படத்திற்குப் பெரிய பலம். படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தராமல் திட்டமிட்டபடி சரியாக வேலை செய்து முடித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1,500 பேர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விஜய் அழகாக மேனேஜ் செய்திருக்கிறார்.

என்னை வேறொரு கோணத்தில் இந்தப் படம் காட்டும். ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்து விஷயங்களிலும் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம். இப்படியான கதையைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பொங்கல் அன்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். எங்களுடன் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

இயக்குநர் விஜய் பேசும்போது, “நான் நிறையப் படங்கள் இயக்கி இருக்கிறேன். ஆனால், இது எனக்கே ஒரு புது அனுபவமாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுவாதி, ராஜசேகர் சாருக்கு நன்றி. எங்களைப் போலவே இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸூக்கும் நன்றி.

தமிழ்க்குமரன் சார் இந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே இணைத் தயாரிப்பு செய்கிறேன் என்று சொன்னார். அதன் பிறகுதான் இந்தப் படம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது. இந்த வரிசையில் நாங்களும் வருகிறோம்.

பல சிரமங்களைத் தாண்டிதான் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். அருண் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். சினிமாவில் உள்ள திறமையான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் நிமிஷாவும் இருப்பார். ஏமி, இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயல் கதாபாத்திரம்தான் படத்தின் ஆன்மா. தொழில் நுட்பக் குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர்.

இப்போது சினிமா தியேட்டருக்கான படங்கள், டிஜிட்டல் சினிமா எனப் பிரிந்துள்ளது. நிச்சயம் ‘மிஷன் சாப்டர்-1’ உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். எல்லாப் படங்களுமே சேர்ந்து ஜெயிக்க வேண்டும்” என்றார்.

Our Score