கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நான்கு படங்களிலும் வெற்றி நாயகனாக திகழ்ந்த ஜெயம் ரவி, இந்த ஆண்டை ‘மிருதன்’ திரைப்படத்தின் மூலம் கம்பீரமாகத் துவக்கியிருக்கிறார்.
இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம், தமிழ் சினிமா இத்தனை ஆண்டு காலம் தொடாத ‘சோம்பி’ எனப்படும் நடமாடும் பிண மனிதர்களைக் கொண்ட பாணியில் அமைந்த படம்.
படம் வெளியாகி தமிழகமெங்கும் வெற்றி நடை போட்டு வரும் இந்த வேளையில் படம் பற்றி பேசிய இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், “மிருதன்’ என்பது ‘சோம்பி’யின் சரியான தமிழ் ஆக்கம், எதிர்பாராதவிதமாக மிருகமாக மாறும் மனிதர்கள் பற்றிய வார்த்தை என்பதால் மிருகத்தில் முதல் இரண்டு எழுத்தையும், மனிதனில் கடைசி இரண்டு எழுத்தையும் சேர்த்து ‘மிருதன்’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தின் திரைக்கதையோட்டம் முழுக்க, முழுக்க 6 கதாபாத்திரங்களை மையப்படுத்தி பின்னப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில், இடம் பெறும் சோம்பிகளின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதவை.
ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகன் படம் முழுக்க இந்தக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் முதல் படம் இது. ஜெயம் ரவி இல்லாவிட்டால் இந்தப் படத்தைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது. அவர் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது.
உடைகள் மாற்ற மட்டுமே கேரவனுக்குள் செல்வாரே தவிர, மீதி நேரம் முழுவதும் அவர் படப்பிடிப்பு தளத்திலேயே இருப்பார். அவரின் முழு அர்ப்பணிப்பாலேயே இது போன்ற படத்தை இத்தனை குறுகிய காலத்தில் எடுக்க முடிந்தது. ஜெயம் ரவியினாலேயே இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமான படமாகவும் மாறிவிட்டது…” என்றார்.











