ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது.
சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆரின் வரலாறு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ரமணா கம்யூனிகேஷன்ஸின் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்’ மற்றும் ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர், அதைப் போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தப்பட்டது.
சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ்குமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல தென்னிந்திய மொழிப் படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர், இப்படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டை பயிற்சிகளை கற்று வருகிறார்.
‘பெரியார்’ திரைப்படத்தில் அண்ணாவாக நடித்த இயக்குநர் S.S.ஸ்டான்லிதான் இந்தப் படத்திலும் அண்ணாவாக நடிக்கிறார். ‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் எழுதியுள்ளார்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கிறார் வரும் நவம்பர் 8- ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார்.