என்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும்.
அப்படி ஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பதுதான் விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம்.
வலுவான கதையம்சத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்திற்கு மெல்லினம் போன்ற ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த படத்திற்கு ‘புரியாத புதிர்’ என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக் குழுவினர்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில், ‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரித்து இருக்கும் இந்த ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் வாங்கியிருக்கிறார்.
இதே தலைப்பில் கடந்த 1990-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தலைப்பு மாற்றம் பற்றிப் பேசிய விநியோகஸ்தர் ஜே.சதீஷ்குமார், “சுவாரசியமான திருப்பங்களோடும், எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளை கொண்டும் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நிச்சயமாக ‘மெல்லிசை’ போன்ற இதமான தலைப்பு பொருந்தாது என்று நாங்கள் அனைவரும் கருதினோம்.
விஜய் சேதுபதி போன்ற சிறந்த நட்சத்திர கலைஞரின் திரைப்படத்திற்கு துடிப்பான தலைப்புதான் இருக்க வேண்டும் என்று எண்ணி, இந்த ‘புரியாத புதிர்’ தலைப்பை தேர்ந்தெடுத்தோம்.
இதற்கான அனுமதி வேண்டி ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ செளத்ரி சாரை அனுகினோம். அவர் இந்த்த் தலைப்பை பரந்த மனப்பான்மையோடு வழங்கியதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
வரும் நவம்பர் மாதத்தில் ‘புரியாத புதிர்’ படம் வெளியாகவிருக்கிறது. இந்த வருடத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படமாகவும், எங்கள் நிறுவனத்திற்காக அவர் நடித்திருக்கும் ஐந்தாவது வெற்றிப் படமாகவும் இந்த ‘புரியாத புதிர்’ திரைப்படம் இருக்கும் என்று நம்புகிறோம்.
கூடுதலாக, நிச்சயமாக இந்த வருடத்திற்கான வெற்றிகரமான நடிகர் என்ற பெயரை விஜய்சேதுபதிக்கு எங்களுடைய ‘புரியாத புதிர்’ படம் பெற்று தரும்….” என்று நம்பிக்கையுடன் கூறினார்.