full screen background image

மீண்டும் ஒரு காதல் கதை – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் கதை – சினிமா விமர்சனம்

மலையாளத்தில் மெகா ஹிட்டடிக்கும் மென்மையான காதல் திரைப்படங்கள், தமிழ் ரசிகர்களால் ஓட வைக்கப்பட மாட்டாது என்பதை இந்தப் படமும் நிரூபித்திருக்கிறது.

2012-ம் வருடம் மலையாளத்தில் வெளியான ‘தட்டத்தின் மறையத்து’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம்.

பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான சீனிவாசனும், மலையாள நடிகர் முகேஷும் இணைந்து தயாரித்த இந்த மலையாளப் படத்தில் நிவின் பாலியும், இஷா தல்வாரும் இணைந்து நடித்திருந்தனர். சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் எழுதி, இயக்கியிருந்தார். படம் வெளியாகி கேரளாவில் அந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சாதனை படைத்தது.

தமிழுக்கு இதைக் கொண்டு வருவதென்பது மீன் மார்க்கெட்டில் தயிர் சாதம் விற்பது போன்ற நிலைமை என்பதை புரிந்துகொண்டு பல கதாநாயக நடிகர்களும் ஒதுங்கிக் கொள்ள.. அறிமுக நடிகரான வால்டர் பிலிப்ஸ் தனது அறிமுகத்திற்கு இதுதான் ஏற்ற கதை என்று சொல்லி ரீமேக் உரிமையை வாங்கி படமாக்கியிருக்கிறார்.

மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த இஷா தல்வாரே தமிழிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் நாசர், ‘தலைவாசல்’ விஜய், மனோஜ் கே.ஜெயன், சிங்கமுத்து, வனிதா கிருஷ்ணசந்திரன், அர்ஜூன், வித்யூலோகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – விஷ்ணு சர்மா, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தொகுப்பு – தியாகராஜன். ‘யாரடி நீ மோகினி’ படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

காலம் காலமாக நாம் பார்த்து சலித்துப் போயிருக்கும் அதே காதல் கதைதான். மலையாளத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்த உயிரோட்டமும், கேரள முஸ்லீம்கள் குடும்பத்தில் இப்போதும் நிலவும் பெண்ணடிமைத்தனத்தின் உச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான் படத்தின் ஹிட்டுக்குக் காரணம்.

தமிழகத்தில் மைனாரிட்டியாக இருக்கும் முஸ்லீம் மக்களில் கால்வாசிபேர்கூட சினிமா பார்க்க வர மாட்டார்கள் என்பதாலும், அவர்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைக் குரலை அவர்களே கேட்க முடியாமல் இருக்கும்போது மற்றவர்களுக்கு அது எந்த பாதிப்பை நிகழ்த்திவிடப் போகிறது..?

நாகர்கோவிலின் கட்டுக்கோப்பான பாரம்பரியமிக்க முஸ்லீம் குடும்பத்து பெண் ஆயிஷா என்னும் இஷா தல்வார். இவரது பெரியப்பா நாசர். தந்தை ‘தலைவாசல்’ விஜய், இவருக்கு ஒரு அக்கா. அவரும் திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்தாகி வீடு திரும்பிவிட்டார்.

ஒரு திருமணத்தில் ஆயிஷாவை பார்க்கும் வினோத் என்னும் ஹீரோ, பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். இந்தக் காதல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வலுப்பெற்று காதலர்களிடையே மன ஒற்றுமை வரும்போது வீட்டுக்கு தெரிந்துவிடுகிறது.

பிறகென்ன..? வீட்டில் கடும் காவல். ஆயிஷாவுக்கு எதிர்ப்பு. காதலர்களை பிரிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனையும் மீறி ஆயிஷாவை பார்க்கப் போகும் ஹீரோவை போலீஸில் ஒப்படைக்கிறார்கள்.

இப்போது போலீஸ் இந்த காதல் கதையை முழுமையாகக் கேட்கிறது. காதல் திருமணம் செய்திருக்கும் இன்ஸ்பெக்டர் மனோஜ் கே.ஜெயன் இந்தக் காதலை தான் நடத்தி வைப்பதாக காதலனிடம் உறுதியளிக்கிறார். இறுதியில் இவர்களது காதல் ஜெயித்ததா..? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? என்பதுதான் படம்.

ஹீரோ வால்டர் பிலிப்ஸுக்கு முதல் படம் என்பதால் விட்டுவிடுவோம். அந்தக் காதலருக்கே உரித்தான குணத்தோடும், படபடப்போடும், காதல் உணர்வோடும் நடித்திருக்கிறார். சில இடங்களில் நம்மையும் சேர்த்தே பதைபதைக்க வைத்திருக்கிறார்.

இஷா தல்வார் மலையாளத்தில் தான் செய்த அதே கேரக்டரை இஷ்டப்பட்டு செய்திருக்கிறார். கேரளாவின் முஸ்லீம் முகத்திற்கு அழகு எடுத்துக்காட்டு என்பதால் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். ஆயிஷாவாக நடித்தும் இருக்கிறார். கிளைமாக்ஸில் அனைவரையும்விட தலைவாசல் விஜய்யே ஸ்கோர் செய்துவிட்டதால் இவரை வைத்து திரும்ப வேண்டிய கதை வேறுவிதமாக மாறியிருக்கிறது.

இவருடைய அக்காவாக நடித்திருக்கும் திவ்யா, நாசர், ‘தலைவாசல்’ விஜய் இந்த முஸ்லீம் குடும்பம் தங்களது கேரக்டர்களை சின்னச் சின்ன ஆக்சன்களிலேயே செய்து காட்டி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் ‘தலைவாசல்’ விஜய்யின் மென்மையான அதே சமயம் அழுத்தமான அந்த வசன உச்சரிப்பும், நடிப்பும், நாசரை திடுக்கிட வைக்கும் செயலும்.. மிக அழகாக பதிவாகியிருக்கிறது.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மனோஜ் கே.ஜெயன்தான் மலையாளத்திலும் இதே கேரக்டரை செய்திருக்கிறார். அசால்ட்டாகாவும், கொஞ்சம் காமெடி இன்ஸ்பெக்டராகவும் வந்திருப்பதால் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர வாய்ப்பில்லை. ஆனால் இந்த சேட்டன் நடிப்பில் குறையே வைக்கவில்லை.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பது ஒளிப்பதிவுதான். விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவில் முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அப்படியொரு அட்ராக்சன். கலர் டோனிலும் பலவித மேஜிக்குகள் செய்து கடைசிவரையிலும் ஸ்கிரீனை பார்க்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கேமிராவின் கைவண்ணம் சூப்பர்..

ஜி.வி.பிரகாஷின் இசையில் ஒலித்த நான்கு பாடல்களுமே ஒரு முறை மட்டுமே கேட்கும் ரகமாக இருந்தது என்பது கொடுமையான விஷயம். ஒளிப்பதிவு இல்லாமல் போயிருந்தால் பாடல் காட்சிகளையும் பார்த்திருக்க முடியாது..!

இயக்குநர் மித்ரன் ஜவஹர் “மலையாளப் படம் படு போர். அதனால் பல காட்சிகளை தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றி எடுத்திருக்கிறேன்” என்று சொன்னார். ஆனால் படத்தில் பார்த்தால் 90 சதவிகிதம் காட்சிகளை.. ஏன் சில ஷாட்டுகளைகூட அப்படியேதான் காப்பி செய்திருக்கிறார்.

முன்னரே சொன்னதுபோல மலையாள முஸ்லீம்களின் கலாச்சாரத்துடன் ஒன்றிப் போன ஒரு விஷயத்தை இந்தப் படம் கேள்விக்குறியாக்கியதால் கேரளாவில் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தமிழகத்தில் அந்த உணர்வை தூண்டவே இல்லாத காரணத்தினால் சாதாரணமான ஒரு காதல் படமாக தேங்கிவிட்டது.

மீண்டும் ஒரு காதல் கதையை ஒரு முறை பார்க்கலாம்..!

Our Score