full screen background image

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் “மரகதமலை”

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் “மரகதமலை”

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது “மரகதமலை”. 

அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத் தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.

புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.

இந்த மரகத மலை படம் பற்றி இயக்குநர் லதா பேசும்போது,”18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை இத்திரைப்படம். ஒரு ஜமீனிடம் இருக்கும் புதையலை ஒரு கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் மனைவி, பிள்ளையை காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார்.

அப்போது அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா? என்பதைத்தான் சாகசங்கள் நிறைந்த மாயாஜால கதையாக சொல்லியிருக்கிறோம்.

தடா வனப் பகுதியில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்திவிட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில்  பயன்படுத்தியதில்லை, நாங்கள்தான் முதல்முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.

சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக “மரகதமலை ” இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்” என்றார் இயக்குநர் S.லதா.

இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

Our Score