தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டிலேயே படமாக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக் காடு ‘படம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரகுநாதன் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன்., ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன.
ஒளிப்பதிவு – நட்சத்திர பிரகாஷ், இசை – ஜெய் பிரகாஷ், பாடல்கள் விவேகா, மீனாட்சி சுந்தரம் , அருண் பாரதி, படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை இயக்கம் – மார்டின் டைட்டஸ், நடனம் – சாய் மதி, சண்டை பயிற்சி – மைக்கேல், மக்கள் தொடர்பு – A. ஜான்.
படம் பற்றி இயக்குநர் மங்களேஷ்வரன் பேசும்போது, “இந்த ‘மரகதக் காடு’ திரைப்படம் முழுக்க, முழுக்க ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பெருமளவில் அழிந்துவரும் காடுகள் பற்றி பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் சாலைகள் விரிய விரிய, காடுகள் அழிக்கப்படும் அநீதி பற்றி இந்தப் படம் பேசுகிறது.
காடு, காடு தரும் பொருட்கள்தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற கதை இது.
நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. வெறும் இனக் கவர்ச்சியில் மூழ்கி ஆண் – பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும்..?
அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல். காட்டுப் பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன..? முடிவு என்ன..? என்பதே கதை.
இவர்களின் காதலுடன் காடு, காட்டுவாசி மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், அவர்களது வாழ்வியல், காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும்.
தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைவரும், சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைபடுகிற நாம் காற்றே பற்றாக் குறையாகப் போகுதுன்னு கவலை இல்லாமல் இருக்கோம். Save water-ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றியும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம்.
படம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை. எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை.
படம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும். அதேபோல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்…” என்றார் இயக்குநர் மங்களேஷ்வரன்.
தற்போது ‘மரகதக் காடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.