“காதல்’ என்ற வார்த்தையை கேட்டா இன்னும் கொஞ்ச நால்ல, கடவுள்கூட கல்லெடுத்து அடிக்கப் போறாரு…” என்று புதுமுக இயக்குநர் ஒருவர், தற்போதைய ‘காதல் கலாச்சாரம்’ குறித்து ரொம்பவே ஆதங்கப்படுகிறார்.
டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள் குங்குமம்’. சத்யசரவணா என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நாயகன்-நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திங்களில் நடித்திருக்கிறார்கள்.
சதீஷ் எம்.எஸ். ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வநம்பி இசையமைக்க, எல்.வி.தாஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கபிலன், யுகபாரதி, கானா பாலா மற்றும் ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுத, தினா, ஜாய் மதி, ஜெய் ஆகியோர் நடனம் அமைத்துள்ளன.
இப்படம் குறித்து இயக்குநர் சத்யசரவணன் கூறுகையில், “காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் சரி.. காதல் பக்கமே தலை வச்சுக்கூட படுத்ததே இல்லைன்னு சொல்றவங்களும் சரி… அவங்கள்ல எத்தன பேரு அவங்களோட பையனோ, பொண்ணோ காதலிச்சா.. அவங்களோட காதலைப் புரிஞ்சுக்கிட்டு அவங்கள ஒன்னு சேர்த்து வச்சு சந்தோசப்படுறாங்க…?
‘காதல்’ன்ற வார்த்தையே கேட்டாலே கண்டிப்பா, கடவுள்கூட இன்னும் கொஞ்ச நாள்ல கல்லெடுத்து அடிக்க ஆரம்பிச்சிருவாரு. ஏன்னா அந்தளவுக்கு ஒரு காலத்துல இதயப்பூர்வமா நேசிக்கபட்ட.. சுவாசிக்கபட்ட ‘காதல்’, இன்னைக்கி தெருவுல ஓடுற சாக்கடையைவிட கேவலமா மாறிருச்சு…
இந்த நிலைமைல, அன்பை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, புழுதி காட்டின் அடையாளமாய் அழுக்கு முகங்களோடு முகங்களாக… கைகளுக்கு எட்டாத கற்பனைகளுடன் திரியும் காதலர்கள் இருவரின் அன்பின் உச்சத்தை… இன்று சமூகத்தை மிகக் கொடூரமான முறையில் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சனையுடன் கலந்து, அழகிய கிராம வாசனையுடன் இந்த ‘மஞ்சள் குங்குமம்’ திரைப்படத்தில் சொல்கிறோம்.
மதுரை மாவட்டத்தை சுற்றி எங்க கிராமத்துக்கே உரித்தான செம்மண் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படப்பிடிப்பையும் மொத்தம் 58 நாட்களில் முடித்துள்ளோம்” என்றார்.
தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்து, படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம்.