இன்று மலையாள தேசத்தில் இருந்து வெளியான இந்தச் செய்தியைப் பார்த்து நம்பத்தான் முடியவில்லை. ஆனால் நம்பகமானது என்கிறது அந்த பத்திரிகைச் செய்தி.
புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க அவர் காலமான பிறகே முயல்வார்கள்.. அல்லது அவருடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை மட்டுமே பிரதானமாக வைத்து படமாக்குவார்கள். இந்த இரண்டுமில்லாமல் அந்த பிரபலம் வாழுகின்ற காலத்திலேயே அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கத் துணிந்திருக்கும் தைரியம் மல்லுக்காரர்களுக்கே மட்டுமே சாத்தியம்.
மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் வாழ்க்கை வரலாறுதான் படமாகப் போகிறதாம். ஜூட் ஆண்டனி என்ற இயக்குநர் இதனை இயக்கப் போகிறாராம். ‘நேரம்’ படத்தில் நடித்த நிவின் பாலிதான் மம்மூட்டியாக நடிக்கப் போகிறாராம்.. இந்தப் படத்திற்கு ‘நட்சத்திரங்களுடே ராஜகுமாரன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பொருத்தமான பெயர்தான்..!
இந்த ஐடியாவை வழங்கியதே நிவின் பாலிதானாம்..! இதில் வினீத் சீனிவாசன், சீனிவாசனாக நடிக்கிறார். இந்திரஜித் சுகுமாரன், சுகுமாரனாக நடிக்கிறாராம். குஞ்சக்கோ போபன், பிரேம் நஸீராக நடிக்கிறாராம். மோகன்லால் பாத்திரத்திற்கு ஆள் தேடுகிறார்களாம்.. இந்தப் படத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்..
இந்த முயற்சி நிச்சயம் சாத்தியப்பட்டது எனில் மல்லு தேசமே பாராட்டுக்குரியது..!