தமிழ்த் திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ’38 வயதினிலே’ படம் மூலமாகத் துவக்கிய நடிகை ஜோதிகா அடுத்து நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.
‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாதான் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘பசங்க-2’ படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் பிரம்மா சமீபத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.
“எனக்குள்ள இந்தக் கதை தயாரானதும் இது ஜோதிகாவுக்குத்தான் பொருத்தமான கதையா எனக்குத் தோன்றியது.. அதனால் அவங்ககிட்ட முதல்ல சொல்லிப் பார்ப்போமன்னு நினைச்சுத்தான் சொன்னேன். நான் கதை சொல்லும்போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு.
அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. நம்ம ‘2-டி’ கம்பெனிலேயே இதைத் தயாரித்துவிடலாம்’ன்னு உற்சாகப்படுத்தினார்.
இது ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. அதனால் ‘மகளிர் மட்டும்’ என்ற டைட்டில் கிடைச்சா படத்துக்கு ரீச் இன்னும் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். இதை நான் சூர்யா ஸார்கிட்ட சொன்னவுடனேயே சூர்யா சார், கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார்.
இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்துல நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதுமுகங்கள் இருக்காங்க.
முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு. இந்தப் படத்துலேயே ஒரு மாசம் workshop வச்சிருந்தேன். இந்த மாதிரி பயிற்சிப் பட்டறை வைக்கறது அவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்ல. இது ஆக்டிங் ப்ராக்டீஸ் கிடையாது. கேரக்டரோட ஆழத்தை உணர்ந்து உள்வாங்கிக்கிற முயற்சியாகத்தான் இந்த ஒர்க்ஷாப்.
ஜோதிகா, ஊர்வசி, சரண்யா எல்லாருமே பிஸியானவங்க. அதனால அவங்களத் தவிர மத்தவங்க பயிற்சி எடுத்தாங்க. ஊர்வசியும், நாசரும் ஏற்கனவே பழைய ‘மகளிர் மட்டும்’ படத்துல நடிச்சிருந்தவங்க. மறுபடியும் அதே டைட்டில்ல நடிச்சிருக்கறது சந்தோஷமா இருக்குன்னு சொன்னாங்க.
பானுப்ரியா மேடம்மை நடிக்க வைக்கலாம்னு தேடும்போது அவங்க வெளிநாடு போயிருந்தாங்க. அதனால் அவங்க வரும்வரைக்கும் காத்திருந்து கதையைச் சொல்லி படத்துல கமிட் செஞ்சோம். அதே மாதிரி ஊர்வசி மேடமும். அவங்க ஒரு தகவல் களஞ்சியம். அவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.
ஆக்ரா ரோட்டுல ஜோதிகா புல்லட் ஓட்டுற சீன்ல பைக்ல பின்னாடி உட்காரச் சொன்னதும் ஊர்வசி மேடம் மிரண்டுட்டாங்க. ‘எனக்கும் பைக்குக்கும் ராசியே கிடையாது’னு தயங்கினாங்க. யாருக்கும் தெரியாமல் கேமரா வச்சு, லைவ் ஷூட் பண்ணினோம்.
செட்டுல சரண்யா மேடம்ல இருந்து எல்லாருமே ஒண்ணு சேர்ந்தா பிக்னிக் மாதிரி பேசி, சிரிச்சு, சந்தோஷமாக இருந்தோம்.
படத்தோட பூஜை அன்னிக்கு சூர்யா சாரால் வர முடியல. முதல் நாள் ஷூட்டிங் அன்னிக்கு ‘அழகான படத்தை எடுத்துக் கொடுங்க. வாழ்த்துகள்’னு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதன் பிறகு நிறைய முறை ஸ்பாட்டுக்கு வருவார். ‘எந்த ஆர்ட்டிஸ்ட் தேவைனாலும் சொல்லுங்க’ன்னு சொல்லுவார். ஒரே ஒரு படம் பண்ணின இயக்குநர்னு நினைக்காம எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
என்னோட குறும்படங்கள்ல இருந்து கூடவே இருக்கும் எஸ்.மணிகண்டன், ‘குற்றம் கடிதலு’க்கு அடுத்து இதற்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இடையே தெலுங்கில் ரெண்டு படங்கள் அவர் பண்ணிட்டார். படத்துக்கு இசை ஜிப்ரான். ‘வாகை சூடவா’ல இருந்து அவரோட இசையை கவனிச்சிட்டிருக்கேன். இதுல நான்கு பாடல்கள், ஒரு தீம் மியூசிக், ஒரு ஃபோக்னு வெரைட்டி கொடுத்திருக்கார்.
ஜோதிகா இந்தப் படத்துல பிரபாவதி என்ற ஆவணப்பட இயக்குநரா நடிச்சிருக்காங்க. வழக்கமான ஜோதிகா-ல இருந்து கொஞ்சம் மாறியிருக்கற ஜோதிகாவா இருக்கணும். ரெகுலர் ஆடியன்ஸ் விரும்பற ஜோதிகாவாகவும் தெரியணும்னு இந்த கேரக்டரை உருவாக்கினேன். புல்லட் தவிர, வேற ஒரு வாகனமும் அவங்க ட்ரைவ் பண்ணுவாங்க. நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு வந்தாங்க.
அவங்க பஞ்சாபி பெண். ஆனா, தமிழை உணர்ந்து பேசி நடிக்கறாங்க. தங்லீஷ்லதான் ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன். டயலாக்கைக்கூட முதல் நாளே வாங்கிட்டுபோய் மறுநாள் வரும்போது மனப்பாடமா பேசினாங்க.
‘மாயாவி’ல சொந்தக் குரல்ல டப்பிங் பேசியிருப்பாங்க. அதுக்குப் பிறகு இதுலதான் அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க. காலையில ஆறு மணிக்கு ஷூட்டிங்னா ஷார்ப்பா அந்த டைமுக்கு செட்ல இருப்பாங்க. டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட்..” என்று புகழ்ந்து தள்ளினார்.