ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மதுர வீரன்.’
புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் ’மதுர வீரன்’ திரைப்படம் தற்போது தயாராகியுள்ளது.
இந்தப் படத்தில், சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் மீனாட்சி நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இசை – சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – K.L.பிரவீன், கலை – விதேஷ், சண்டை பயிற்சி – ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு – விஜி சுப்ரமணியன், ஒளிப்பதிவு, இயக்கம் – பி.ஜி.முத்தையா.
ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம் இது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இயக்குநரான பி.ஜி.முத்தையா பத்திரிக்கையாளர்களை சந்தித்து படம் பற்றி நீண்ட விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணியபோது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்க்கையில் இருந்து கதையை எடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த மதுர வீரன் படத்தின் கதை உருவானது.
இந்தப் படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல; அதன் பின்னணியில் இருக்கக் கூடிய அரசியலையும் மையப்படுத்தியே இதன் திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் படத்தில் இல்லை.
இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருப்பார்கள். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஓரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள்தான் உண்டு.
படத்தைப் பார்க்கும்போது அவரவர் முன் வைக்கும் காரணங்களும், வாதங்களும் நியாயமானதாக இருக்கும். இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியின் முடிவுகளும் சரியான முடிவாக இருக்கும்.
இந்தப் படம் மற்ற படங்களை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டு இருக்கும். ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்றால் ஹீரோ மாட்டை அடக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இப்படத்திலும் அந்த மாதிரியான காட்சிகள் இல்லை.
படத்தில் நிகழும் அனைத்து பிரச்சினைகளைக் குறித்தும் சொல்லி கொண்டு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ நீண்ட வசனங்களை கூறியவுடன் வில்லன்கள் கத்தியை கீழே போட்டுவிட்டு போவது போன்ற காட்சிகளும் கிடையாது. யதார்த்தமான காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு.
இப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் சிறிய பீரியட் பிளாஷ்பேக் காட்சியில் அந்த பகுதியில் இருந்த உண்மையான பிரபலமான மாடுபிடி வீரர்களின் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளோம்.
இப்படத்தின் ஹீரோ மதுரையை பின்புலமாக கொண்டவனாகவும், வயது 20 அல்லது 23 வயதை கொண்டவன் போலவும் ஓரு சபையில் 100, 1000 பேர்கள் முன்பு எழுந்து குரல் கொடுக்கும்போதும் மற்ற அனைவரும் அமைதியாக அவன் பேசுவதை கேட்க வேண்டும். அப்படி ஒருத்தனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் சண்முக பாண்டியனை தேர்வு செய்தோம்.
அப்பா அரசியலில் மிகப் பெரிய பின்புலம் கொண்டவர். மிக பெரிய ஸ்டாரின் பையன் என்ற ஓரு சிறிய சலனத்தைக்கூட நான் அவரிடம் காணவில்லை. நானும் அப்படி நினைத்துக்கொண்டு அவரிடம் கதையைக்கூட சொல்லவில்லை.
கேப்டன் பற்றி நமக்கு எல்லாம் தெரியும். பிரேமலதா மேடம்தான் படத்தின் இசையமைப்பாளர் யார், எடிட்டர் யார் என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் கேப்டன் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்றுதான் கேட்டார். அந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் தீவிரமாக இருந்தார். சண்முக பாண்டியனும் சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார்.
சண்முக பாண்டியனின் உயரம் 6.3 அடி இருக்கலாம் படத்தில் ஹீரோவிற்கு அருகில் நிற்கும்போது குறைந்த 6 அடி உயரம் இருக்கவேண்டும், ஓரு 18 முதல் 20 வயதுடைய மதுரையை சார்ந்த ஓரு பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் படத்தில் ஹீரோயினின் காட்சிகளும் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. எனவே புதுமுகமாக இருந்தால் போதுமானதாக இருக்கும் என்றுதான் மீனாட்சியைத் தேர்வு செய்தோம்.
படத்தில் ‘மதுர வீரன்’ சமுத்திரகனிதான். படத்தில் அவருடைய கேரக்டர் ‘ரத்னவேலு’. அவர்தான் ‘மதுர வீரன்’ கதாபாத்திரம். சண்முக பாண்டியனின் தந்தை கதாபாத்திரம். ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க 3 நடிகர்களை நான் எண்ணி இருந்தேன் முதலாவதாக ராஜ்கிரண். இரண்டவதாக சத்யராஜ். மூன்றாவதாகத்தான் சமுத்திரக்கனி.
படத்தின் ஹீரோவின் வயதை வைத்து ரத்னவேலு கதாபாத்திரம் முடிவு ஹீரோ குறைவான வயது என்பதால் சமுத்திரக்கனியை தேர்வு செய்தோம். படத்தின் மிக முக்கியமான மிக வலுவான கதாபாத்திரம் அவருடையது. படத்தில் வரும் பாடல்கள் மிக சிறப்பாகவும் பாடல்களின் வரிகள் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும், புரியும் வகையிலும் இருக்க வேண்டும் என்று பேசியே வேலை செய்தோம்.
சந்தோஷ் தயாநிதி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பே கதை உருவாக்கிவிட்டோம். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய சிறிய தொகுப்பும் இந்தப் படத்தில் உள்ளது…” என்றார் இயக்குநர் P.G. முத்தையா.