full screen background image

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் தனது படத் தயாரிப்பு செலவுக்காக, பிரபல பைனான்சியரான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

பின்னர், இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்றுக் கொள்வது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதைம் திருப்பிச் செலுத்தும்வரை, விஷால் நடிக்கும்  அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் படத்தின் வெளியீட்டு உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் லைகா நிறுவனத்திற்கு விஷால் தரவில்லை.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த லைகா நிறுவனம், “எங்களுக்கு கொடுக்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கொடுக்காமல்,  வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டு படத்தை வெளியிட அனுமதி தந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் 15 கோடி ரூபாயை செலுத்தவில்லை.

இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை..?” என விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அப்போது விஷால் தரப்பில், “லைகா நிறுவனம் மேல்முறையீட்டுக்கு சென்றதால்தான் நாங்கள் பணத்தை செலுத்தவில்லை. வீரமே வாகை சூடும் படம் ஓடாததால் எனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கான வட்டியை இப்போதுவரையிலும் நான் கட்டி வருகிறேன். இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட 15 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை இன்னும் 6 மாதங்களானாலும் என்னால் செலுத்த இயலாது.ஒரு படத்தை எடுக்க பெரும் பாடுபடும் நிலையில், கடைசி நேரத்தில்தான் தடை கோருகிறார்கள்..” என்று வாதிட்டனர்.

அப்போது லைகா தரப்பில், “விஷால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்த நீதிமன்றத்திற்கு தொடர்ந்து தவறான தகவல்களையும் தெரிவிக்கிறார். எனவே அவர் தன்னுடைய சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யட்டும்” என்று வாதிடப்பட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “தொடர்ந்து படங்களில் நடிக்கும்போது நீங்கள் கடனை திரும்ப செலுத்தலாமே? உங்களுடைய திரைப்பட வாழ்க்கை முடிந்து விட்டதா?” என விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அப்போது விஷால் தரப்பில், “என் சினிமா வாழ்க்கை முடிவில்லை. எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன்..” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினமும் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Our Score