சென்ற வாரம் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாயா’. இந்த ‘மாயா’ திரைப்படத்தின் வெற்றி விழா இன்று நடுப்பகலில் தி.நகர் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன், நடிகர்கள் ஆரி, அம்ஜத்கான், ஒளிப்பதிவாளர் சத்யா, படத் தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முதலாவதாக பேசிய நடிகர் ஆரி, “இந்த ‘மாயா’ படத்தின் வெற்றி எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த முழுமையான வெற்றியை சுவைக்கத்தான் நான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தேன்.
நான் ‘மாயா’ படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம் ‘ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள்..?’ என்று என்னிடம் வருத்தமாக கேட்டனர். அவர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘மாயா’வின் வெற்றி பதில் சொல்லியுள்ளது.
இந்தப் படம் தெலுங்கிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நேற்று தெலுங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்னை பார்த்த ஒருவர் நான் யார் என்று தெரியாமல் ரொம்ப நேரமாக என்னைப் பார்த்து கொண்டே இருந்தார். கடைசியில் சுதாரித்து என்னிடம் வந்து, ‘நீங்கதான இந்த ‘மயூரி’ படத்தின் ஹீரோ..?’ என்று கேட்டு உறுதி செய்து கொண்டு என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்த், எங்களது ‘மாயா’ படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசியுள்ளது, எங்களுக்கு மிகப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது..” என்றார்.
நடிகர் அம்ஜத் பேசும்போது, “படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன் என்னுடைய நெருங்கிய நண்பர். இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் நான் இந்த படத்தில் நிச்சயம் எதாவது ஒரு சின்ன வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
இயக்குநர் அஷ்வின் சரவணனுக்கு நான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும், ஆடிஷன் டெஸ்ட் வைத்துதான் என்னை தேர்வு செய்தார். அந்த அளவுக்கு படம் நன்றாக வர வேண்டும் என்று சுயநலத்தோடு உழைத்தார்…” என்றார் அம்ஜத்.
படத்தின் தெலுங்கு விநியோகஸ்தரான தயாரிப்பாளர் கல்யாண் பேசும்போது, “நான் இந்த ‘மாயா’ படத்தை முதல்முறை பார்த்தவுடனேயே, இந்தப் படத்தை நாமதான் வெளியிட வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.
இந்த ‘மாயா’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் மட்டுமே ஐந்தரை கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது மிகப் பெரிய சாதனை…” என்றார்.
படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் கூறும்போது, “இந்த ‘மாயா’ படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. எனக்கு நிறைய நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்மூடித்தனமாக நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
முதலிலேயே இந்தப் படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அது போலவேதான் எடுத்து முடித்திருக்கிறேன். இப்போது படம் பார்த்த பலரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எப்படி எடுப்பது என்று எனக்கே கிளாஸ் எடுத்து வருகிறார்கள். அவர்கள் என்னிடம் அப்படி சொல்லும்போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் ‘மாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன்…” என்றார்.
இறுதியாக பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ‘மாயா’வின் வெற்றி எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும், மன பலத்தையும் தந்துள்ளது. படத்தில் நயன்தாரா நடித்திருக்கவிட்டால் படம் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை…” என்றார்.