மாதா எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஷோபா விஜயன் தயாரிக்கும் படம் ‘மாஸ்க்’.
இந்தப் படத்தில் கதாநாயகனாக ரிஷிதரன் அறிமுகமாகிறார். நாயகியாக ஷகானா நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, பிளாக் பாண்டி, சென்ட்ராயன், யோகி, முனிஸ் ராஜா, மனோபாலா, ஷகிலா, கிங்காங், போண்டாமணி, வெங்கல்ராவ், ஜெயமணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், சத்யேந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வெங்கடேஷ், பகவதி பாலா, இசை – இமானுவேல், கலை – சுப்ரமணி, படத் தொகுப்பு – திரு, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், நிர்வாகத் தயாரிப்பாளர் – அவினாஷ், தயாரிப்பு – ஷோபா விஜயன், எழுத்து, இயக்கம் – புதுகை மாரிசா. இவர் ‘பூவம்பட்டி’, ‘நடு இரவு’ போன்ற படங்களை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குநர் புதுகை மாரிசா பேசும்போது, “சென்ட்ராயன், முனிஸ் ராஜா, பிளாக் பாண்டி, யோகி இந்த நான்கு பேரும் நண்பர்கள். வேலைவெட்டி இல்லாமல், கிடைத்ததை சாப்பிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். உழைக்காமல் பணக்காரனாவதுதான் இவர்களது லட்சியம்.
அப்படி ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களது வாழ்கையில் ஒரு நாள் இரவு ஒரு உருவம் எதிரில் தோன்றி ‘நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்க வேண்டும் என்றால். சுடுகாட்டில் எந்த ஆவி சமாதியை உடைத்துக் கொண்டு முதலில் வருகிறதோ அதை நீங்கள் பிடித்துக் கொண்டுபோய் ஒரு வீட்டில் அடைத்து வைக்க வேண்டும். மறுநாள் அந்த வீட்டில் போய் பார்த்தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்..’ என்று சொல்கிறது.
அதன்படி நண்பர்கள் நால்வரும் ஒரு ஆவியை பிடித்து ஒரு வீட்டில் அடைத்து வைகிறார்கள். மறுநாள் காலையில் ஆவியை அடைத்து வைத்த வீட்டை திறந்து பார்க்கிறார்கள். அவர்கள் நினைத்தது நடந்ததா, இலையா என்பதை திகில் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படவுள்ளது…” என்றார்.