நடிகர் தனுஷின் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாரி-2’. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னையில் ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பாலாஜி மோகன் பேசும்போது, “இந்தப் படம் எடுக்க முக்கிய பக்க பலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘மாரி’ முதல் பாகத்தைவிட இந்த இரண்டாம் பாகம் இன்னும் நன்றாக இருக்கும். யுவன் மூன்று அருமையான பாடல்களை தந்துள்ளார். படத்தில் வில்லன் வேடத்தில் டோவினோ நடித்துள்ளார். மாரிக்கு ஒரு மாஸ் வில்லனாக அமைத்துள்ளார்.
மேலும், படத்தில் நடித்த கிருஷ்ணா, வரலட்சுமி மற்றும் சாய் பல்லவி, ரோபோ சங்கர், வினோத் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘மாரி’ முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் கண்டிப்பாக பெரும் வரவேற்பைப் பெறும்..” என்றார் நம்பிக்கையுடன்.
நடிகர் தனுஷ் பேசும்போது, “நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இந்த ‘மாரி’தான். எனவேதான் இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். இந்த ‘மாரி’ நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. .அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்.
இந்த ‘மாரி-2’ திரைப்படம் ஒரு ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும். குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கலாம். ‘மாரி-2’ படத்தோட வெற்றிக்குப் பின்புதான் பாகம்-3 பற்றி யோசிக்க வேண்டும்.
இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாடலைப் பாடியிருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசிர்வாதம். யுவன் அவர்களுக்கு நான் மட்டுமல்ல.. எங்களது குடும்பமே மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளோம். ‘காதல் கொண்டேன்’ படத்தில் யுவனின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்தப் படம் மட்டும் வெற்றி பெறவில்லையென்றால் எங்களது குடும்பமே அந்தச் சமயத்தில் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியவர் யுவன் சங்கர் ராஜாதான். இந்தப் படத்தில் மூன்று அருமையான பாடல்களை தந்துள்ளார் யுவன். மூன்றுமே சிறப்பாக வந்திருக்கிறது..!
டோவினோவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் அவருக்கு பெரும் வரவேற்பளிப்பார்கள் என்று உறுதியாய் நம்புகிறேன். சாய் பல்லவி, மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் முதன் முதலாக நடித்ததில் மகிழ்ச்சி.
ரோபோ சங்கர் மற்றும் வினோத் ஆகியோர் உடன் படப்பிடிப்பில் நடித்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. படப்பிடிப்பிற்கு சென்றவுடன் முதலில் அவர்களைத்தான் தேடுவேன். அனைவருடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. இந்த ‘மாரி-2’ திரைப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும்…” என்றார்.