‘மாயா’ ‘காஷ்மோரா’வின் வெற்றிகளை தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படம் ‘மாநகரம்’.
இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி மற்றும் முனிஸ்காந்த் ராமதாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – செல்வகுமார், இசை – ஜாவித், சண்டை பயிற்சி – அன்பறிவு, தயாரிப்பு – பொடன்ஷியல் ஸ்டுடியோஸ், இயக்குநர் – லோகேஷ் கனகராஜ்.
வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர், சென்னை என்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்.. அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே படத்தின் கதைக் கரு.
கதையின் முக்கிய புள்ளிகளான நால்வரும், வெவ்வேறு ஊர்களில் இருந்து தங்களுடைய வேலைக்காக சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் நால்வரின் எதிர்பார்ப்பை த்ரில்லர் பாணியில் அமைத்துள்ளார்கள். நான்கு பேர் கதையிலும் ஓர் உள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் தொடர்புக்கு ‘ஹைபர் லிங்க்’ எனும் புதுமையான திரைக்கதை யுக்தியை அமைத்துள்ளார் இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ். குறும்பட இயக்குனரான இது இவரின் முதல் படைப்பாகும்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் பேசும்போது, “நான் சென்னை பையன்தான். என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில்தான் உள்ளது. என்னுடைய அம்மா, அப்பா என என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே சென்னையில்தான் இருக்கிறார்கள்.
நான் வேலை பார்ப்பது ஹைதராபாத்தில். தமிழில் நடிக்கும்போது கதையை தேர்வு செய்து கவனத்தோடு நடிக்கிறேன். அதனால்தான் அதிகமான படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில் எனக்கான வாய்ப்புகள் வந்தபடியே இருப்பதால் அதனைத் தவிர்க்க முடியவில்லை.
இப்போது நான் நடித்துள்ள இந்த ‘மாநகரம்’ திரைப்படமும், அடுத்து வரவிருக்கும் ‘மாயவன்’ போன்ற படங்களும் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் புதுமையான ஒரு படைப்பாக இருக்கும்.
நான் நேற்றுதான் ‘மாநகரம்’ படத்தை பார்த்தேன். மாநகரம் சென்னையின் பெருமையை பற்றி பேசும் படமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது சென்னையை பற்றி நீங்கள் அனைவரும் பெருமையாக எண்ணுவீர்கள் என்பதுதான் உண்மை.
‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொன்ன போது எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டேன். பின்புதான் நம்மிடம் பணமே இல்லையே… எப்படி தயாரிக்க போகிறோம் என்று யோசித்து கொண்டு இருந்தபோது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வந்து இந்த்த் தயாரிப்பில் இணைந்து கொண்டார்.. அவருக்கு எனது மிகப் பெரிய நன்றி…” என்றார் சந்தீப்.
நடிகர் ஸ்ரீ பேசும்போது, “இதுவரை நான் நடித்த அனைத்து படங்களுக்கும் நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இந்த திரைப்படத்துக்கும் நீங்கள் அதே போல் ஆதரவை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்… இந்த ‘மாநகரம்’ திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கதை சார்ந்த முக்கிய விஷயங்களை வெளியே வந்து பிறரிடம் பகிர வேண்டாம். இதில் இருக்கும் ஒரு சஸ்பென்ஸ் வெளியாகிவிட்டால் பின்பு படம் பார்க்கும்போது சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும்..” என்ற வேண்டுகோள் ஒன்றையும் முன் வைத்தார் நடிகர் ஸ்ரீ.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த ‘மாநகரம்’ திரைப்படம் நிச்சயம் அனைவருக்கும் மனதார பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். எப்போதும் எங்கள் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் ‘மாநகரம்’ திரைப்படத்துக்கும் கொடுக்க வேண்டும். படத்தை அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்த்து ரசித்து பைரசியை ஒழிக்க உதவ வேண்டும். காதலில் காத்திருப்பது மகிழ்ச்சியான தருணம்… சினிமாவில் காத்திருப்பது அப்படி அல்ல…” என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “இதுவரை ‘மாநகரம்’ திரைப்படத்தை பார்த்த அனைவரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது. படத்தை பார்த்த பிரபல படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல். அவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் வெளியிட்ட விமர்சனம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. அவர் அதை வெளியிட்டதை தொடர்ந்து பிரபலங்கள் பலர் எங்கள் குழுவில் உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வருகிற மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கும் ‘மாநகரம்’ திரைப்படம் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும்…” என்றார்.
படத்தின் டிரெயிலரை பார்த்தபோது ‘கிருமி’, ‘மெட்ரோ’ படங்களை போல யதார்த்த வாழ்வியலைச் சொல்லும் படமாக இருக்கும் என்பதாகத் தெரிகிறது.
படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!