இந்த வருடத்தின் எதிர்பார்ப்புமிக்க படங்களுள் ஒன்றாக உள்ளது ‘மாபியா-பாகம்-1’ திரைப்படம்.
காரணம், 2018-ம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய இயக்குநரான கார்த்திக் நரேன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருப்பதுதான்.
இந்த ‘மாபியா-பாகம்-1’ படத்தை Lyca Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - ஜாக்ஸ் பெஜாய், ஒளிப்பதிவு - கோகுல் பெனாய், படத் தொகுப்பு - ஶ்ரீஜித் சாரங், சண்டை இயக்கம் - டான் அசோக், கலை இயக்கம் – சிவசங்கர், உடைகள் வடிவமைப்பு - அசோக் குமார், விஷூவல் எஃபெக்ட்ஸ் - Knack Studios, மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா, ரேகா D one, நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜன், தயாரிப்பு – சுபாஸ்கரன், தயாரிப்பு நிறுவனம் - Lyca Productions, எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.
இந்தப் படத்தின் டீஸரும், டிரெயலரும் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இதனையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘மாபியா’ படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் நடிகர் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டும் வகையில் திரளாகத் திரண்டு வந்த அவரது ரசிகர்கள் அதே மேடையிலேயே கேக் வெட்டி கொண்டாடினர்.
விழாவில் பாடலாசிரியர் விவேக் பேசும்போது, “நான் முதன்முதலில் ‘துருவங்கள் 16’ படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்த்திக்கின் திறமை பளிச்சிட்டது. இப்படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களுடன் வந்துள்ளார். அவர் பெரிய அளவில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இந்தப் படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் தாங்கும் அளவுக்கு பாடல்கள் எழுத வேண்டி இருந்தது. அது சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் ஜாக்ஸ் பெஜாய் பேசும்போது,.”இந்த வாய்ப்பிற்காக லைகா நிறுவனத்திற்கும், கார்த்திக் நரேனுக்கும் நன்றி. கார்த்தியை முன்னதாகவே எனக்குத் தெரியும். மிகவும் திறமை வாய்ந்த நபர். அவரது திட்டமிடல் அனைவரையும் அசரடிக்கும்.
இந்தப் படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் ரசிப்பீர்கள். படத்திற்கான இசையில் சிம்பொனியை பயன்படுத்தியுள்ளோம். வெளிநாட்டில் வைத்து ரெக்கார்டிங் செய்தோம். படம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்..” என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசும்போது, “இந்த 'மாபியா' திரைப்படம் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷலான படம். நிறைய நல்ல நண்பர்களை எனக்குத் தந்த படம். ஜேக்ஸின் இசை எனக்கு பிடிக்கும்.
அருண், பிரசன்னா திரையில் வந்தாலே அவர்களது திறமை மிளிரும். கார்த்திக் தனக்கு என்ன தேவை என தெரிந்து வேலை செய்யும் மனிதர். இத்தனை சீக்கிரத்தில் இப்படியொரு படம் செய்ய, அவர் திறமையே காரணம்.
அருண் விஜய் பலருக்கும் முன் மாதிரியாக திகழ்பவர். என் வாழ்விலும் நிறைய பாதிப்பை தந்துள்ளார். ஒரு தோல்வியிலிருந்து மீண்டு எப்படி வெற்றி பெறுவது என கற்றுக் கொள்ள அவரிடம் நிறைய இருக்கிறது. தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். ‘மாபியா’ இனி உங்கள் கைகளில் இருக்கிறது...” என்றார்.
நடிகர் பிரசன்னா பேசும்போது, “இந்த மேடை 'நன்றி அறிவிப்பு கூட்டம்' மாதிரி ஆகிவிட்டது. இந்தப் படம் நிச்சயமாக வெற்றிப் படமாகும் என்று அனைவர் மனதிலும் பதிந்துள்ளதால், அனைவரும் நன்றி கூறுகிறார்கள். படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் லைகா நிறுவனத்துக்கு நன்றி.
தமிழில் சொன்ன நேரத்தில், சொன்ன பட்ஜெட்டில், முடிக்க கூடிய இயக்குநர்கள் வெகு சிலரே. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி போன்றோர் வரிசையில் இந்த கார்த்திக் நரேனும் இடம் பிடித்துவிட்டார். அவர் வெகு நீண்ட காலம் சினிமாவில் மிளிர்வார். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இயக்குநர் அவர். மிகச் சிறந்த திட்டமிடல் அவரிடம் இருக்கிறது.
அருண் பற்றி ப்ரியா அழகாக சொல்லிவிட்டார். தோல்வியில் இருந்து மீண்டெழுவதில், பலருக்கு சினிமாவில் முன் மாதிரியாக இருக்கிறார். உங்களிடம் கற்றுக்கொள்கிறேன். தமிழை கூச்சமின்றி அழகாக பேசும் நாயகி ப்ரியா, அவர் மிகப் பெரிய அளவில் வரவேண்டும். விவேக்கின் பாடல் வரிகள் அனைத்தும் அருமை. தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப் பெரும் பலமாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். படம் எங்களுக்கு நிறைவாக இருக்கிறது. உங்களையும் கவரும்...” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசும்போது, “நான் சினிமாவுக்குள் நுழைந்து இது 25-வது வருடம். இது என் குடும்பம் போல். பத்திரிக்கையாளர்களின் எழுத்துதான் என்னை வடிவமைத்தது. உங்களுக்கு பெரிய நன்றி. இந்த 25 வருடங்களாக எனக்கு நிறைய பேர் ஆதரவாக இருந்தார்கள், எனது குடும்பம், ரசிகர்கள் எல்லோரும் பெரிதும் ஆதரவாக உள்ளார்கள்.
25-வது வருடத்தில் எனது முதல் படமாக ‘மாபியா’ வெளிவரவுள்ளது. இயக்குநர் கார்த்திக் என்னை எப்படி காட்டப் போகிறார் என்று பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தேன்.
கார்த்திக்கை பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் எனபதில் படு தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும். படக் குழுவினர் அனைவருமே பெரும் பலமாக இப்படத்திற்கு உழைத்துள்ளனர். இவ்வளவு சீக்கிரத்தில் படமெடுக்க பின்னணியில் பெரும் உழைப்பு இருக்கிறது.
லைகா நிறுவனமும் எங்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார்கள். கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம். விவேக்கின் வரிகள் அற்புதமாக இருந்தது. பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப் பெரிய சந்தோஷம். மிக அர்ப்பணிப்புமிக்க நடிகர்.
இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன். ப்ரியா என்னை பற்றி நல்லவிதமாக சொன்னதற்கு நன்றி. தமிழ் பேசும் அழகான ஹீரோயின் ஷங்கர் சார் படத்திலும் நடிக்கிறார். மிக ஜாலியானவர். திறமை மிக்க ஒரு நடிகை. அவருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம். படத்தை நாங்கள் பார்த்தோம். எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தப் படம் தரும்...” என்றார்.
இயக்குநர் கார்த்திக் நரேன் பேசும்போது, “இந்த ‘மாபியா’ திரைப்படம் உருவாகக் காரணமாயிருந்த இருவர் லைகாவும், அருண் விஜய்யும்தான். அவர்கள் இருவருக்கும் எனது நன்றி.
இந்தப் படத்தின் கதை விவாதத்தின்போதே அருண் விஜய், பிரசன்னாதான் என் மனதில் இருந்தார்கள். அவர்களே இந்தப் படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி.
தடம் படம் உருவாகும் சமயத்தில்தான் அருண் விஜய்யிடம் இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. வெகு இயல்பாக இருந்தார். வெகு அற்புதமாக நடித்துள்ளார்.
பிரசன்னாவும் மிகச் சிறந்த நடிகர்தான். அவரது நடிப்பில் இந்தப் படத்தின் வில்லன் வேடம் மிகச் சிறப்பாக பேசப்படும். ப்ரியா பவானி சங்கர் இதுவரை செய்யாத ஒரு வேடத்தை இதில் செய்துள்ளார் இந்தக் கதாப்பாத்திரம் பற்றி கேட்டபோதே என்னை வித்தியாசமாக யோசித்ததற்கு நன்றி என்றார். ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள்.
பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நான் ரசிகன். இதில் பாடல்களை அருமையாக எழுதியுள்ளார். ஜேக்ஸ் அண்ணாவை எனக்கு ‘துருவங்கள் 16’ படத்தில் இருந்தே தெரியும். இந்தப் படத்தில் உலகத் தரமான இசையை தந்துள்ளார்.
33 நாட்களில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். படக் குழுவின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. படக் குழு அனைவருக்கும் நன்றி. வரும் பிப்ரவரி 21-ம் தேதி படம் வெளியாகிறது.
இத்திரைப்படம் ஆடு, புலி விளையாட்டு போல் இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்...” என்றார்.