full screen background image

“பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்…” – தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்..!

“பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்…” – தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்..!

இப்போது தமிழ்த் திரையுலகில் பாடல் எழுத எண்ணற்ற கவிஞர்கள் வந்து குவிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் அளவுக்கு நியாயமான சம்பளமும், மரியாதையும், பெயரும் இங்கே கிடைப்பதில்லை.

பலருடைய பெயர்கள் இருட்ட்டிப்பு செய்யப்படுகின்றன. படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட அவர்களை மேடைக்குக் கூப்பிடுவதில்லை. அப்படியொரு வெளியில் சொல்ல முடியாத சிக்கலில் தவிக்கும் அவர்களைப் பற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் வெளியிட்டிருக்கும் அறிக்கை இது :

“இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தின் பங்களிப்பில் பாடல்கள் மிக முக்கியமான இடத்தை கொண்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில். 40 பாடல்கள் இடம் பெற்ற படங்கள்கூட இருந்திருக்கின்றன. இன்றும்கூட பல படங்களை பார்க்க, அந்த படத்தின் வெற்றிக்கும் முன் வெளியீடாக அந்தப் படத்தின் பாடல்களே மிகப் பெரிய காரணமாக அமைகின்றன.

ஆனால் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களின் நிலை பற்றி சொல்ல வருத்தமாக இருக்கிறது. கோபமாகவும் இருக்கிறது.

சமீபத்தில் மேடை போட்டு நாட்டாமை பண்ணுகிற ஒருவர் இயக்கிய படத்தில் நண்பர் ஒருவர் பாடல் எழுதி இருந்தார். அவரிடம் அந்த படம் பற்றி யதார்த்தமாக பேசும்போது, ‘அந்த படத்தில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். ஆனால் என் பெயரை போஸ்டரில் போடவில்லை. என் பெயரை போடுங்கள் என இயக்குநரிடம் கேட்டேன். உங்கள் பெயரை போட்டால் போஸ்டரின் அழகு குறைந்து விடும் என்று சொன்னதோடு கடைசிவரை போஸ்டரில் பெயரே போடாமல் விட்டுவிட்டார்கள்’ என்று சொல்லி வருத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் எழுதிய முதல் பாடல் பெரிய ஹிட்டடித்த பாடல்தான்.

சமீபத்தில் நானும் இன்னும் இரண்டு பாடலாசிரியர்களும் பாடல் எழுதியுள்ள ஒரு படத்தோட போஸ்டர் வெளிவந்தது. அடடா.. நம்ம படமாச்சேன்னு போஸ்டர்ல பெயரை தேடுனா… என் பெயர் மட்டுமல்ல… மற்ற பாடலாசிரியர்கள் பெயரும் அதில் இல்லை. படம் சம்பந்தமாக பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்திகள், படத்தின் விக்கிபீடியா பக்கம்… எதிலும் பாடலாசிரியர்களின் பெயர்கள் இல்லை.

இசையமைப்பாளர்களையும், இயக்குநர்களையும் நெருங்கிய நண்பர்களாக கொண்டவர்கள்கூட சில நேரங்களில் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். வளர்ந்த பாடலாசிரியர்கள் பெயரை விரும்பி போஸ்டரில், செய்திகளில் போடுகிறார்கள். ஆனால், வளர்ந்து வரும் பாடலாசிரியர்கள் விரும்பி, கெஞ்சி கேட்டால்கூட மறுத்துவிடுகிறார்கள்.

சிலர் பத்து பல்லவி, இருபது சரணம் என எழுதி வாங்குகிறார்கள். ஆனால் அதற்கு சரியாக சன்மானமும் கொடுப்பதில்லை. பெயருக்கான அங்கீகாரத்தையும் கொடுப்பதில்லை. வளர்ந்து வரும் பாடலாசிரியர்களின் சன்மானம் பற்றி கேட்டால் உங்களுக்கு மயக்கமே வரும். ரெண்டாயிரம், மூவாயிரங்களைத் தாண்டி பத்தாயிரம் தொட்டுவிட்டால் அதுவே பெரிய அதிசயம்.

ஒரு ஹிட் பாடலின் வரிகளுக்கு சொந்தக்கார பாடலாசிரியர், டிவிக்களில் என் பாட்டு வரும்போது, வேறு ஒருவரின் பெயரை போடுகிறார்கள் என்று சொல்லி கண் கலங்கினார்.

தொடர்ந்து பெரிய படம், பெரிய இசையமைப்பாளருக்கு பாடல் எழுதும் நண்பர் ஒருவரின் நிலைமை வேறு மாதிரி. ‘பாட்டு ஹிட்தான். ஆனால், பத்து பைசாகூட இன்னும் கையில கெடைக்கல தலைவா…’ என படம் வெளியாகி நான்கு மாதங்கள் கழிந்த பின்னும் புலம்புகிறார் அவர்.

ஒரு மிகப் பெரிய படத்தின் பாடலாசிரியர் அவர். ஒரு புது படத்திற்காக பாட்டு எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். மெட்டு கொடுத்து எழுதச் சொல்லிவிட்டார்கள். அவரும் பாடல் எழுதிக் கொடுத்து விட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டார். ஒரு நாள் படத்தின் இசை வெளியீடு சம்பந்தமான செய்திகளை பார்த்தார். இயக்குநருக்கு போன் செய்தார். இயக்குநர் போனை எடுக்கவில்லை. இசையமைப்பாளரும் அப்படியே.

படத்தில் அவர் எழுதிய பாடல் படம் இடம் பெறவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அதற்காக அவருக்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. போன் மேல போன் போட்டு பார்த்து ஓய்ந்துவிட்ட அவர், என்னிடம் சொன்னது. ‘பாட்டெழுதி கேட்கிறப்போ… அப்டி பேசுனாங்க சார்… இப்போ படத்தில் பாட்டு இல்லைங்கிறது விஷயமில்ல. பத்து பைசா தரலேங்கிறதும்கூட ஒரு விஷயமில்லை சார். அதை எங்கிட்ட முறையாக ஒருத்தரும் சொல்லலையேங்கிறதுதான் என் வருத்தம்’ என்றார்.

போஸ்டர், செய்திகள், விக்கிபீடியா, ஃபேஸ்புக் பக்கங்கள் எதிலும் பாடலாசிரியர்கள் பெயரை போடாமல், கொட்டை எழுத்தில் ‘ஆடியோ வெளியீடு’ன்னு மட்டும் போடுவதைப் பார்த்தால் எழும் கோபத்தைவிடவும், காமெடியும் வருத்தமும்தான் கூடுகிறது.

பெயருக்கும் பணத்துக்கும்தான் இந்த போராட்டம். சொந்த ஊர், பெத்த அப்பா, அம்மா, உறவுகள், நண்பர்கள்… எல்லாத்தையும் விட்டுட்டு சென்னைக்கு ஓடி வந்து பல வருடங்களாக போராடி ஒரு இடத்துக்கு வர பாடலாசியர்கள் மட்டுமில்ல, ஒவ்வொரு சினிமாக்காரனும் படுற கஷ்டம் ரொம்ப ரொம்ப பெரியது.

அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் நண்பர்களே. சம்பளமோ, சன்மானமோ… அதை கொஞ்சமா கொடுத்தால்கூட பரவாயில்லை. ஆனால், மறக்காமல் அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரத்தை, அவர்களின் பெயர்களுக்கு கொடுங்க.

அவ்வளவு பெரிய போஸ்டர்களில் பாடலாசிரியர்கள் பெயரையும் சேர்த்து போவதால் எதுவும் கெட்டுப் போகப் போவதில்லை. அதோடு படத்தின் செய்திகள், போஸ்டர்களில் எதிலும் பெயர் இல்லையென்றால், சில நேரங்களில்… பிரபலமான ஆடியோ இணைய தளங்களான… ITunes, Saavn, Gaana, Raaga, Hungama, இது போன்ற பிற தளங்களிலும் பாடலாசிரியர்கள் பெயர் இடம் பெறாமல் போகிறது.

செய்திகள், மேடைகள், போஸ்டர்ஸ், டிரெய்லர்களில்.. அவங்களுக்கான சின்ன அங்கீகாரத்தை கொடுத்தால், அவர்களின் வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு சின்ன காரணமாக இருப்பீர்கள். அவர்கள் உங்களது வளர்ச்சிக்கு ஒரு சின்ன காரணமாக இருப்பதுபோல்..!

அதை விட்டுவிட்டு அவர்களின் வாயிலும் வயித்திலும் அடித்து துரோகம் பண்ணாதீங்க. இது என் அன்பான வேண்டுகோள்தான்.

அதே நேரத்தில் பாடலாசிரியர்களை அக்கறையோடும் அன்போடும் கவனித்து அவர்களுக்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும் தருகிறவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அனைவருக்கும் என் அன்பின் நன்றி..” 

– இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பாடலாசிரியர் முருகன் மந்திரம்.

 

Our Score