சின்ன படங்களுக்கு திரை கிடைப்பதில்லை என்ற பொதுவான புகாருக்கு முற்றிலும் எதிர் மாறான கருத்தை சொல்கிறார் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் கதாநாயகன் அஜய்.
சின்னத்திரையில் மிக பிரபலமான ‘கோலங்கள்’ ஆதி என்றழைக்கப்படும் அஜய் ‘ஆதியும் அந்தமும்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . கௌஷிக் இயக்கத்தில்.. எல்.வீ.கணேசன் இசை அமைப்பில்.. வாசன் ஒளிபதிவில்.. என்.கே.கிராப்ட் மற்றும் ஆர்.எஸ். ஆர். ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிந்து திரையிட தயாராக உள்ளது.
திரையுலகப் பிரமுகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த முற்றிலும் மாறுபட்ட த்ரில்லர் படத்துக்கு திரை அரங்கு உரிமையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை சொல்லி பூரிப்பு அடைகிறார் நாயகன் அஜய்.
“எனக்கு கிடைத்த ஊக்கம் தரும் வார்த்தைகளும், திரையரங்கு குறித்த உத்திரவாதமும் என்னை மிகவும் பெருமைக்குரியவன் ஆக்குகிறது . திரையரங்கு உரிமையாளர்கள்தான் முதல் ரசிகர்கள். அவர்களின் சினிமா குறித்த அனுபவம் என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் தேவை..” என்று கூறினார் .
விநியோகஸ்தர்கள் மூலமாக படங்களைத் திரையிட்டால் இது போன்று சொல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போகும். இப்போது தாங்களே சொந்தமாக ரிலீஸ் செய்வதால் நேரடியாக திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்து.. உண்மை நிலவரம் கிடைத்திருக்கும்.. அதுதான் ஹீரோ அஜய் பொங்கி மகிழ்கிறார். ஏதோ நல்ல தியேட்டர்கள் கிடைத்து படம் ரிலீஸானால் நமக்கும் சந்தோஷம்தான்..!