‘லிங்கா’ திரைப்படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்ட விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட சில விநியோகஸ்தர்கள் கடந்த மாத்த்தில் இருந்தே போராடி வருகிறார்கள்.
கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டம்கூட நடத்திப் பார்த்தார்கள். அதன் பின்பும் அவர்களுக்கு நஷ்டஈட்டுத் தொகை கிடைக்கவில்லை என்பதால் புதிய போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள் தாங்கள் புதிதாக நடத்தவுள்ள போராட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டார்கள்.
அந்த அறிக்கை இதுதான் :
“லிங்கா’ திரைப்படத்தை பொறுத்தவரை எங்களுக்கு தெரிந்த ஒரே நபர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்தான். அவரை நம்பித்தான் இந்தப் படத்தை வாங்கினோம். பட பிரமோஷனில் பேசிய ரஜினிகாந்த் படத்தை பற்றியும், கதையைப் பற்றியும் உயர்வாகப் பேசியதையடுத்து இந்தப் படத்தை வாங்க முடிவு செய்தோம்.
ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனவே விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி இழப்பை ஈடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தும் சரியான பதில் இல்லாததால், கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம்.
அதன் பின்பு எங்களை அழைத்த திருப்பூர் சுப்ரமணி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும், கணக்குகளை ஒப்படைக்குமாறும் கூறியதையடுத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் நஷ்டத் தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் எங்களை தொடர்பு கொண்ட ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்ரமணி தயாரிப்பாளர் 10 சதவிகித நஷ்ட ஈடு தொகை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாகக் கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
இரண்டு மாத காலமாக எந்தவித முடிவுமின்றி சென்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க ரஜினிகாந்த் முன் வராதது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சியடைந்தோம். மனமில்லாத இவர்களை மல்லுக்கட்ட பணமில்லாத எங்களுக்கு வேறு வழி கொடுக்காமல் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளியுள்ளனர்.
இதற்கு மேலும் ரஜினிகாந்த் தலையிட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வகை செய்யும்வகையில் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து உண்மையை விளக்கி ‘மெகா பிச்சை’ என்ற பெயரில் பிச்சையெடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
இந்தப் போராட்டம் போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்தின் வீட்டு வாசலில் இருந்து துவக்கப்படும். பிரபல அரசியல் கட்சித் தலைவர் முதல் பிச்சையைப் போட்டு போராட்டத்தைத் துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இனிமேல் ரஜினிகாந்த் நடித்த படத்தை வாங்கி திரையிட்டால் பிச்சையெடுக்கும் நிலைதான் ஏற்படும் என்பதை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கும்வண்ணமாகவும், ரஜினிகாந்தை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும்விதமாகவும் இந்தப் போராட்டம் இருக்கும்.
இந்தப் போராட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கையில் பதாகையும், திருவோடும் ஏந்தி பிச்சையெடுப்பார்கள். போராட்டம் நோக்கம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
‘லிங்கா’ படத்தைத் திரையிட்ட திரையரங்குகளின் வாசலில் பிச்சையெடுக்கும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேனர்கள் கட்டி அதன் அருகில் உண்டியல் வைக்கப்படும். இந்தப் போராட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்…”
இவ்வாறு தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.