‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ போன்ற வித்தியாசமான படைப்புகளால் பெரிதும் பாராட்டப்படும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், இப்போது தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார்.
தனது புதிய படத்தின் தலைப்பை ‘ஹவுஸ் ஓனர்’ என்று வித்தியாசமாக வைத்திருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
“இந்தப் படம் ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும்…” என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் மேலும் பேசும்போது, “நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம்தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். அந்த நேரத்தில் என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால், அந்தப் படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன்.
சமீபத்தில் நான் மும்பைக்கு சென்றிருந்தபோது ஒரு ஹிந்தி திரைப்படத்தை பார்த்தேன். அந்தப் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். சில, பல காரணங்களால் அது நடக்கவில்லை.
ஆனால், அந்த படம் பார்த்த பிறகு எனக்குள் எழுந்த உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான, அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பதுதான் படத்தின் மைய கருத்து. இதை நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்லப் போகிறேன்.
இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஜோனான் டி.ஜான் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படம் விரைவில் துவங்க உள்ளது…” என்றார்.