கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குநராக ராமு தங்கராஜ் மற்றும் படத் தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன், நிர்வாக தயாரிப்பாளர் N.சுப்ரமணியன், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத்.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் லைகா நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் லைகா நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜி.கே.தமிழ் குமரன் தெரிவித்தார்.



















