நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம், உருவாக ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் ஆகியோரின் அற்புதமான கூட்டணிதான் அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
புகழ் பெற்ற திகில் கதாசிரியரான எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி உருவாகி இருக்கும் இந்த மெடிக்கோ – கிரைம் – திரில்லர் திரைப்படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது.
பிரபல தெலுங்கு திரைப்பட வசனகர்த்தாவான ராமகிருஷ்ணன்தான் இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகளை கவனித்துக் கொள்கிறார்.
ஏற்கெனவே ‘என்னை அறிந்தால்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘என்த வாடு காணி’ திரைப்படம் மூலமாகவும், அல்லு அர்ஜுனின் ‘புரூஸ் லீ’ திரைப்படம் மூலமாகவும் சிறந்ததொரு அதிரடி நடிகராக தெலுங்கு ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டார் அருண் விஜய். இதன் காரணமாகவே இந்த குற்றம் 23 படத்தையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார் அருண் விஜய்.
“தெலுங்கு சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கான எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். நிச்சயமாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த ‘குற்றம் 23’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது.
எங்கள் படத்தின் டப்பிங் வேலைகளை புகழ் பெற்ற தெலுங்கு திரைப்பட வசனகர்த்தாவான ராமகிருஷ்ணனோடு இணைந்து தொடங்கி இருக்கிறோம். மணிரத்னம் சார் மற்றும் ஷங்கர் சாரின் திரைப்படங்களுக்கு ஆஸ்தான தெலுங்கு வசனகர்த்தா இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘குற்றம் 23’ தெலுங்கு பதிப்பின் தலைப்பை இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்துவிடுவோம். ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும், மிக பிரம்மாண்டமான முறையில் எங்கள் ‘குற்றம் 23’ படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் ‘குற்றம் 23’ படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான அருண் விஜய்.