full screen background image

“குதிரை வால்’ அறிவுப்பூர்வமான திரைப்படம்” – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு..!

“குதிரை வால்’ அறிவுப்பூர்வமான திரைப்படம்” – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு..!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரை வால்’.

கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்களான மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை வெளியிட பல ஒடிடி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், திரையரங்கில் மட்டுமே இப்படத்தை வெளியிடுவேன் என்பதில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் பா.இரஞ்சித் மூவரும் உறுதியாக இருந்தார்கள்.

காரணம், இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போதுதான் இதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையால்தானாம்.

அப்படி ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, சமீபத்தில் வெளியான டிரைலர் எதிர்ப்பார்ப்பை அதிக்கரிக்கவும் செய்திருக்கிறது.

இந்த நிலையில், ‘குதிரைவால்’ படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் பங்கேற்று படம் பார்த்ததோடு, படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின் இந்தக் குதிரை வால்’ படம் குறித்து கூறுகையில், “தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரை வால்’.

ஒரு இயக்குநர் நான் நினைத்த அறிவுப்பூர்வமான விஷயங்களை திரைப்படமாக கொடுத்திருக்கும் முதல் திரைப்படம் இதுதான். நான் உள்பட பல இயக்குநர்களும் நாங்கள் நினைத்ததை 10 சதவீதம்தான் படத்தில் சொல்வோம். ஆனால், இந்த படத்தின் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததை 100 சதவீதம் முழுமையாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் பாராட்டுகள்.

ஒரு சைக்காலாஜிக்கல் பயணமாகவே இப்படம் இருந்தது. நான் படம் பார்க்கும்போது எனக்கு புதுவித உணர்வை கொடுத்தது. இந்தப் படம் ஆங்கிலப் படத்துக்கு நிகராக இருக்கிறது. இந்த படத்தின் மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. பெரிய, பெரிய விருதுகள் வாங்குவதற்கு தமிழ் சினிமா வெகு தூரத்தில் இல்லை. மிக குறைவான தொலைவில் இருக்கிறது என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம். இந்தப் படத்தை மிகப் பொறுமையாக பார்க்க வேண்டும். இது போன்ற படங்களை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே இதுதான் மிகச் சிறந்த படம்.” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குதிரை வால்’ படம் குறித்து கூறுகையில், “மிகவும் பிரமிப்பான திரைப்படம் இது. இப்படி ஒரு படத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.” என்றார்.

Our Score