full screen background image

‘குருதி ஆட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

‘குருதி ஆட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

‘எட்டு தோட்டாக்கள்’ என ஒரே படம் மூலம், புகழ் பெற்ற இயக்குநராக மாறிவிட்ட இயக்குநர் ஶ்ரீகணேஷின் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம், தலைப்பு முதலாகவே அழுத்தமான பின்புலம் கொண்டதாக, ரசிகர்களிடம் அதீத கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்த மகிழ்ச்சியில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தயராகி வருகிறது படக் குழு.

Kuruthi-Aattam-wrapped-1

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் பேசும்போது, “மிகத் திறமை வாய்ந்த நடிகர்களான அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெரும் மகிழ்ச்சியையும், கற்றுக் கொள்ளும் நல்ல அனுபவத்தையும் தந்தது.

நாயகன் அதர்வா முரளி எப்போதும் இயக்குநர்களின் நடிகராகவே இருந்து வருகிறார். ஆனால் எப்படிப்பட்ட நடிகரானாலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருபவர்கள் என்னைப் போல் புதுமுக இயக்குநர்களுக்கு திரைக்கதையில், இயக்கத்தில், தங்களது அறிவுரையை வழங்குவார்கள்.

ஆனால், அதர்வா முரளி ஒரு சிறு துளி கூட அப்படி நடக்கவில்லை. திரைக்கதையை கேட்டு ஒப்புக் கொண்ட பிறகு, அவர் தன்னை முழுதாக என்னிடம் ஒப்புவித்துவிட்டார்.

Kuruthi-Aattam-wrapped-2

ப்ரியா பவானி சங்கர் தமிழ் பேசும் நடிகையாக பல உயரங்களுக்கு செல்லக் கூடிய திறமைசாலி. அவர் தந்து வரும் தொடர் வெற்றி படங்கள் மட்டுமல்ல.. வரவிருக்கும் அவரது படங்களும் மிகப் பிரமாண்டமான இடத்தை அவருக்கு தரக் கூடியது.

ராதிகா மேடம், நடிகர் ராதாரவி அவர்களுடன் வேலை செய்ய முதலில் என்னுள் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது. மிகப் பெரும் ஆளுமைகளாக இருந்தும் அனைவருடனும் அவர்கள் வெகு எளிமையாக பழகினார்கள்.

பேபி திவ்யதர்ஷினி இத்திரைப்படம் மூலம் மிகப் பெரிய இடத்தை அடைவார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் படப்பிடிப்பில் இருந்தபோது படக் குழுவில் இருந்த அனைவரின் செல்லமாக மாறிவிட்டார்.

இத்திரைப்படத்தை நினைத்தபடியே உருவாக்க பெரும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களுக்கு இந்நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படம் ‘எட்டு தோட்டாக்கள்’ போன்று ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு தரும்…” என்றார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரெயிலர் மற்றும் இசை விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

 

Our Score