தயாரிப்பாளர் ‘நீல்கிரீஸ்’ முருகனின் ‘நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூத்தன்’.
இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன், நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் பிரபுதேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் கே.பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என பெரிய திரையுலக பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.
இசை – பாலாஜி, ஒளிப்பதிவு – மாடசாமி, படத் தொகுப்பு – பீட்டர் பாபியா, கலை – சி.ஜி.ஆனந்த், நடனம் – அஷோக் ராஜா, மக்கள் தொடர்பு – ஷேக், சுரேஷ், நிர்வாக தயாரிப்பு – மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு – ‘நீல்கரிஸ்’ முருகன், எழுத்து, இயக்கம் – வெங்கி.
சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
ஏற்கெனவே சினிமாவை பின்னணியாகக் கொண்டு நிறையப் படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் புதிய கோணத்தில் இதுவரையிலும் சொல்லாத கதையில் துணை நடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.
இத்திரைப்படம் வரும் 11-ம்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி தியேட்டருக்கு வரும் ரசிகர்களைக் கவர்வதற்காக புதிய, புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ‘நீல்கிரிஸ்’ முருகன்.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதிய முறையில் தொடங்கி பரபரப்பை கிளப்பினார் தயாரிப்பாளர்.
இப்போது இன்னும் ஒரு முயற்சியாக படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கம் பரிசாக தரப் போவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர்.
தமிழ்நாட்டில் ‘கூத்தன்’ படம் வெளியாகும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். படம் பார்க்க வரும் ரசிகர்கள், அங்கு கொடுக்கப்படும் கூப்பனில் தியேட்டர் டிக்கெட்டின் நம்பரையும், தங்களது போன் நம்பர், முகவரி விவரத்தையும் எழுதி அந்தக் கூப்பன் பெட்டியில் போட வேண்டும்.
தமிழகம் முழுவதிலும் இருந்தும் கலெக்ட் செய்யப்படும் ஒட்டு மொத்தக் கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் நடைபெறவிருக்கும் ‘கூத்தன்’ படத்தின் வெற்றி விழாவில் அந்த அதிர்ஷ்டசாலிகள் ஒவ்வொருவருக்கும் 1 பவுன் தங்கம் வீதம் மொத்தம் 18 பவுன் தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
இப்படி, படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களுக்கு பரிசினையும் அறிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் ‘நீல்கிரிஸ்’ முருகன்.
இனி இப்படியெல்லாம் செய்தால்தான் தமிழகத்தில் சினிமா தியேட்டர்களுக்கு கூட்டம் வரும் போலிருக்கிறது..!
தமிழ்ச் சினிமாவுலகம் போற போக்கு சுத்தமா சரியில்லை..!









