ரிலீசான முதல் மூன்று நாட்களில் 42 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது ரஜினியின் ‘கோச்சடையான்’ திரைப்படம்.
இந்தத் தகவல் அப்படத்தை வினியோகம் செய்த ஈராஸ் நிறுவனம் சார்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ‘கோச்சடையானின்’ இந்த வசூல் சாதனையினால் ரஜினியை ‘பவர் ஆஃப் தலைவர்’ என்றும் அந்த நிறுவனம் பெருமையோடு வர்ணித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் ‘கோச்சடையானுக்கு’ மிகப் பிரமாண்ட வரவேற்பு இருந்ததாகவும், ரிலீஸ் அன்று காலை 5 மணியிலிருந்தே ‘கோச்சடையானை’ ரசிகர்கள் கொண்டாடத் துவங்கி விட்டார்கள் என்றும், அதே அளவு வரவேற்பு உலகம் முழுக்க இருந்ததாகவும் சொல்கிறது ஈராஸ்.
உலகம் முழுவதும், 3000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 6 மொழிகளில் ரிலீசான ‘கோச்சடையான்’ திரைப்படம், முதல் 3 நாட்களில் மட்டும் 42 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் வசூலான தொகை மட்டுமே 30 கோடி. வெளிநாடுகளில் 12 கோடி என்கிறது ஈராஸ் நிறுவனம். வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் இதுவரையில் எந்தவொரு தமிழ்ப் படத்திற்குக் கிடைக்காத அளவுக்கு ‘கோச்சடையானுக்கு’ ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
அமெரிக்காவில் 43,700 டாலர்கள், கனடாவில் 5,600 டாலர்கள், இங்கிலாந்தில் 8,000 பவுண்டுகள், ஆஸ்திரேலியாவில் 12,000 ஆஸ்திரேலிய டாலர்கள், மலேசியாவில் 50,600 மலேசிய ரூபாய்கள் இந்த 3 நாட்களிலேயே வசூலாகியுள்ளது.
படத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடி என்கிறார்கள். இந்தக் கணக்குப்படி பார்த்தால் இரண்டு வாரங்களிலேயே இந்தத் தயாரிப்புச் செலவு தியேட்டர் வசூல் மூலமாகவே தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்துவிடும் என்றே தெரிகிறது. இன்னும் இருக்கும் பிற பிஸினஸ் வழிகளின் மூலமாக மேலும் ஒரு 100 கோடி கிடைக்க வாய்ப்புண்டு என்று தெரிகிறது..!
ரஜினி என்னும் பெயருக்கு இருக்கும் சக்தியை இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோடம்பாக்கத்தில் அசைக்க முடியவில்லை.. இனியும் முடியாது என்றே தோன்றுகிறது..!