கேரளாவின் மிக மதிப்பிற்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி. குறுப் நினைவு விருது கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக 2 நாட்களுக்கு முன்பாக அந்த விருது கமிட்டி அறிவித்தது.
இதையடுத்து கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்கள் பாலியல் சீண்டல் புகார்கள் கொடுத்தனர். இதன் காரணமாக தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மலையாள நடிகை பார்வதி கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
வைரமுத்து மீதான கண்டனங்கள் வழுக்கவே வழங்கவிருந்த ஓ.என்.வி. குறுப் நினைவு விருதினை மறுபரிசீலனை செய்யப் போவதாக அந்தத் தேர்வுக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது அந்த ஓ.என்.வி. இலக்கிய விருதை திரும்ப அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருமைமிக்க ஓ.என்.வி. இலக்கிய விருது இந்த வருடம் எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி. கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.
ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சில பேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி. குரூப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.
அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி. கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.
மற்றும் மலையாள மண் மீதும் அந்த மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத் தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.
தமிழுக்கும், மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி..” என்று தெரிவித்துள்ளர்.
இதையடுத்து, ஓ.என்.வி. குறுப் நினைவு விருது இன்னமும் வைரமுத்துவுக்கு கொடுப்பதே உறுதியாகாத நிலையில், வாங்காத விருதினை வைரமுத்து எப்படி திருப்பித் தர முடியும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் இணையத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.