அடுத்தடுத்து ஹிட்டுக்களை சளைக்காமல் கொடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய இளம் நடிகரான சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படம் தனித்து திரைக்கு வரும் சூழல்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போயிருக்கிறது.
“இதோ.. இருக்கேன்டா நானு..” என்ற கூக்குரலுடன் சிவகார்த்திகேயுடன் போட்டிக்கு வந்திருக்கிறார் நடிகர் ஜீவா. இவர் நடித்திருக்கும் ‘கவலை வேண்டாம்’ படமும் அதே அக்டோபர் 7-ம் தேதியன்றுதான் ரிலீஸாகவிருக்கிறதாம்.
ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வரும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம், இன்றைய காலதிற்கேற்ப ரொமான்டிக் – காமெடியாக உருவாகியிருக்கிறது. ‘யாமிருக்க பயமேன்’ திரைப்படத்தின் இயக்குநரான டீகே.தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாகவும், காஜல் அகர்வால், மற்றும் சுனைனா இருவரும் ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர்.
மற்றும் R.J. பாலாஜி, பாபி சிம்ஹா, பால சரவணன், மனோபாலா, மயில்சாமி, மதுமிதா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் மந்த்ரா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் நெஞ்சை வருடும் இசை ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்கு பக்கபலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மக்களின் ரசனைகளும், எதிர்பார்ப்புகளும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அந்த விருப்பத்தை நன்கு அறிந்து கொண்டு, அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை வழங்குவதுதான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய கடமை.
அந்த வகையில் நவராத்திரி விடுமுறை நாட்களில் வெளியாகும் எங்களின் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம், ரசிகர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை நிலை நாட்டும்.
ஜீவா மற்றும் காஜல் அகர்வால், ஆகிய இருவரும் தங்களின் முழு திறமையை இந்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளனர்.
இயக்குநர் டீ.கே., ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் சிறப்பம்சங்களை இந்த படத்தில் உள்ளடக்கி உள்ளார்.
பெயருக்கு ஏற்றார் போல், பண்டிகை கால விடுமுறை நாட்களை எந்த கவலையுமின்றி கொண்டாட, எங்களது ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் வழி வகுக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.











