மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கமும், புனே பிலிம் பவுண்டேசனும் இணைந்து நடத்தும் 19-வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘கட்டில்’ தமிழ்த் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.
Maple Leafs Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் இ.வி.கணேஷ் பாபு இந்தக் ‘கட்டில்’ படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஈ.வி.கணேஷ் பாபு நாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மற்றும் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’ நிதீஷ், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம், செம்மலர்அன்னம், ‘மெட்டி ஒலி’சாந்தி, ‘காதல்’ கந்தாஸ், சம்பத்ராம், ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கரன், இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – வைரமுத்து, மதன் கார்க்கி, கலை இயக்கம் – பி.கிருஷ்ணமூர்த்தி, லோகு, நடன இயக்கம் – ‘மெட்டி ஒலி’ சாந்தி, பாடல்கள் – கவிஞர் முத்துலிங்கம், மக்கள் தொடர்பு – சதீஷ்.
இந்தப் படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம், படத் தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.
தற்போது இத்திரைப்படம் புனேவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது.
இது பற்றி ‘கட்டில்’ திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ் பாபு பேசும்போது, “வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
அப்படி ஒரு வாய்ப்பு எனது ‘கட்டில்’ திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக ‘கட்டில் திரைப்பட உருவாக்கம்’ என்ற நூலையும் வெளியிடுகிறேன்.
தமிழ்ச் சினிமாவின் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரி வழங்கிய சாதனையாளர்கள் சிலர் இந்தக் ‘கட்டில்’ திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பை தனிச் சிறப்புடன் வழங்கி இருக்கிறார்கள்.
இந்த ஆளுமைகளின் செயற்பாட்டால் ‘கட்டில்’ திரைப்படம் எப்படி உருவானது என்பதைச் சொல்வதே இந்த நூலின் நோக்கம். ‘கட்டிலில்’ பயணித்தவர்களின் அனுபவ மொழிகளால் நிரம்பி வழிகிறது இந்த நூல்..” என்றார்.
விரைவில் ‘கட்டில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.