காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஜூலை காற்றில்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தொகுப்பாளினியாக இருந்த நடிகை கஸ்தூரி, நடிகர் கார்த்தியை பேச அழைத்தபோது “கார்த்தி வாங்க.. உங்கப்பா இங்க இல்லை. நான் அர்ஜெண்ட்டா உங்களோட ஒரு செல்பி எடுக்கணும்…” என்று கிண்டலாகச் சொல்ல.. பட்டென்று சூடாகிவிட்டார் கார்த்தி. கஸ்தூரியை தள்ளிவிட்டு மைக்கைப் பிடித்த முதல் சில நிமிடங்கள் செல்பி விஷயத்தைப் பற்றி பொரிந்து தள்ளிவிட்டார்.
நடிகர் கார்த்தி இது குறித்து பேசுகையில். “இது தேவையில்லாத விஷயம். இப்போது செல்பி என்ற ஒரு விசயத்திற்கு மரியாதை இல்லாமல் செய்துவிட்டார்கள். பிரபலங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்றால், முதலில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்தை நாம் மறந்தே போய் விட்டோம். மூஞ்சி பக்கத்துல வந்து போட்டோ எடுக்குறாங்க.
ஒவ்வொரு செல்போனிலும் தற்பொழுது முன் பக்கமும், பின் பக்கமும் பிளாஷ் இருக்கிறது. அவ்வளவு லைட்ஸ் கண்களில்பட்டால், கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாதா…? இது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. மைக்ரேன் தலைவலியில் இருப்பவர்களின் நிலைமை என்னாவது..
செல்பி விஷயத்தில் ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. இது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. போட்டோவை கேட்டு எடுக்க வேண்டும் என்கிற மரியாதையே போய்விட்டது. இப்பத்தான் இதைச் சொல்ல முடியும்..” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
கார்த்தி பேசி முடித்ததும் மீண்டும் மைக்கை பிடித்த நடிகை கஸ்தூரி, “இது சும்மா ஒரு காமெடிக்காக செஞ்சது கார்த்தி.. தப்பா எடுத்துக்க வேண்டாம். இந்த செல்பி விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். பிரைவசி பார்க்காமல் எங்களது நிலைமை புரியாமல் படம் எடுக்கிறார்கள்..” என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.
செய்றதையெல்லாம் செஞ்சுட்டு காமெடின்னு சொன்னா எப்படிங்கம்மா..!!!?