பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர்கள் விஷாலும், கார்த்தியும் இணைந்து நடிக்கிறார்கள். இது பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் 5-வது படைப்பாகும்.
இந்தப் படத்தின் கதையை சமீபத்தில் மறைந்த ‘சத்ரியன்’ படத்தின் இயக்குநரான கே.சுபாஷ் எழுதியிருக்கிறார். இதில் சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – சமீர் ரெட்டி, இசை – ஹாரிஸ் ஜெயராஜ், கதை – கே.சுபாஷ், திரைக்கதை, வசனம் – சுபா, பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா, நிர்வாகத் தயாரிப்பு – கே.அஸ்வின்குமார், தயாரிப்பு – பிரபுதேவா – ஐசரி கே.கணேஷ், இயக்கம் – பிரபுதேவா.
படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பிரபுதேவா, விஜய், நடிகர்கள் கார்த்தி, விஷால் மற்றும் ஹீரோயினான சாயிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பிரபுதேவா பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை மறைந்த இயக்குநர் கே.சுபாஷ் எழுதியிருக்கிறார். அவர் கதையை எழுதி முடித்த நேரத்தில் என்னிடம் ‘கதையில் எந்த இடத்தில் சந்தேகம் இருந்தாலும் இப்போதே கேளுங்க. அடுத்த சிட்டிங்கின்போது நான் உயிருடன் இருப்பேனா..?’ என்று எனக்கே தெரியாது என்றார். அவர் சொன்னதுபோலவே ஆகிவிட்டது. இரட்டை எழுத்தாளர்களான சுபா, இதற்கு வசனம் எழுதுகிறார்கள்.
படத்தின் கார்த்தி, விஷால் இருவருக்குமே சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். சாயிஷா மட்டும்தான் கதாநாயகி. வன்முறைக்கும், அஹிம்சைக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் கதையின் கரு. வெவ்வேறு குணமுடைய இரண்டு நாயகர்களுக்கிடையே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை..” என்றார்.
நடிகர் விஷால் பேசும்போது, “வெடி’ படத்துக்கு பிறகு இந்தப் படத்தில்தான் பிரபுதேவாவுடன் நான் இணைகிறேன். தலைப்புக்கேற்றவாறு இரண்டு ராஜாக்கள் படத்தில் இருக்கிறோம். ‘கருப்பு ராஜா’வான நானும் ‘வெள்ளை ராஜா’வான கார்த்தியும் இணைந்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் எங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் இருந்து 10 கோடி ரூபாயை நடிகர் சங்கத்தின கட்டிட நிதிக்காக நாங்கள் வழங்கவிருக்கிறோம். இந்தப் படத்தில் இருந்து இது ஆரம்பிக்கும். படத்தின் நாயகியான சாயிஷா பிரமாதமாக நடனம் ஆடுவார். என் கேரியரில் ஒரு நடிகை இந்த அளவுக்கு சூப்பரா நடனமாடி நான் பார்த்ததே இல்லை. எப்படியும் பிரபுதேவா கார்த்தியை சாயிஷாவோட நடனமாட வைத்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.. கார்த்திதான் பாவம்.. மாட்டிக் கொண்டு முழிக்கப் போகிறார்..” என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, “இரண்டு ஹீரோக்கள் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும்போது பெரும்பாலும் ஈகோ பிராப்ளம் வரும். அதே சமயம் நண்பர்களான ஹீரோக்கள் சேர்ந்து நடித்தால் அது வராது. நானும், விஷாலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்தப் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை.
அதோடு சாயிஷா பற்றி இப்போதே பயமுறுத்துகிறார்கள். அவர் நன்றாக நடனமாடுவார் என்று..! இந்த விஷயத்தில் பிரபுதேவா என்னைக் காப்பாற்றுவார் என்று உறுதியோடு நம்புகிறேன்..” என்றார்.