கிரிக்கெட் நமது நாட்டில் இன்னொரு மதமாகவே காட்சியளிக்கிறது. அத்தகைய கிரிக்கெட் விளையாட்டில் தமிழக பெண்கள் அணிக்காக விளையாடிய லட்சுமி ப்ரியா சந்திரமௌலி இப்போது ‘கள்ளப்படம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மனிதவள மேம்பாட்டு துறையில் மேற்படிப்பு முடித்த, நன்கு தமிழ் பேசும் சென்னைவாசியான லட்சுமி ப்ரியா ஆர்வத்தின் பேரில் தியேட்டர் நாடகங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ‘ கள்ளப்படம் ‘ படப்பிடிப்பின்போது இயக்குனர் வடிவேல் ஒரு சில காட்சிகளுக்காக லட்சுமி ப்ரியாவை ஒரு சில கிலோ எடை கூட வேண்டும் என கூறியிருக்கிறார். “அவ்வளவுதானே சார்…, அப்படியே ஆகட்டும்” என்று கூறி சென்ற லட்சுமி பிரியா, .அளவில்லாமல் சாப்பிட்ட இனிப்புகளின் உதவியால் எடையை கூட்டிவிட்டுத்தான் ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். அந்தக் காட்சியை படமாக்கிய பிறகு இயக்குனர் இப்போது மீண்டும் லட்சுமி பிரியாவிடம் உடல் எடையை குறைக்க சொன்னாராம். தன்னுடைய சீரிய முயற்சியாலும் கடினமான உடல் உழைப்பாலும் லட்சுமி ப்ரியா மீண்டும் எடையை குறைக்கவும் செய்திருக்கிறார். பொதுவாக கதாநாயகர்கள் மட்டுமே மெனக்கெடும் இத்தகைய விசேஷ உழைப்பை லட்சுமி ப்ரியா செய்தது மிகவும் பெருமைக்குரியது.
இதைப் பற்றி லட்சுமி ப்ரியா கூறும்போது “என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பெற்ற சக்தி வாய்ந்த கதாபாத்திரமாகும். .இத்தகைய குணாதிசயங்கள் பொதுவாகவே நாயகர்களுக்கு மட்டுமே அமைத்திருப்பார்கள். என் திரையுலகப் பயணத்தின் துவக்கத்திலேயே, என்னுடைய அபிமான நடிகை நந்திதா தாஸ் ஏற்ற கதாபாத்திரம் போலவே எனக்கும் கிடைத்தது என் பாக்கியமே. சிறந்த நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே தவிர, நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதல்ல…” என்று கூறினார்.
உண்மையில் இந்த நடிகைக்கு லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிய வேண்டும்..! பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம் என்றில்லாமல், நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதைத்தான் குறிக்கோளாகக் கொண்டு கோடம்பாக்கத்தில் கால் வைத்திருக்கிறார்.
வாழ்க வளமுடன்..!