நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’.
இந்தப் படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் படத் தொகுப்பு செய்கிறார். பிரபல பின்னணி பாடகரான வி.வி.பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவிஞர் முத்து விஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
நடனம் – ராஜு பாஸ்கர், சல்சா மணி, தயாரிப்பு நிர்வாகம் – ஷ்யாம் தி ரிபோனித்ரா, மக்கள் தொடர்பு – யுவராஜ், கலை இயக்கம் – நந்தன், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம், தயாரிப்பு – செனித் கெலோத், இணை தயாரிப்பு – சந்தீப் வினோத், சரீன் கெலோத், நிர்வாக தயாரிப்பு – ரஃபிக் காசர்கோடு, சஜீவ் மீரா சாஹிப், எழுத்து, இயக்கம் – கிரண்சந்த்.
படம் பற்றி இயக்குநர் கிரண்சந்த் பேசும்போது, “களரி’ என்றால் ‘தற்காப்பு கலை’ என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் ‘களரி’ என்றால் ‘போர்க்களம்’ என்பதுதான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்க்களம்தான். அதை மையப்படுத்திதான் இந்த தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
கொச்சி மாநகரத்தில் ‘வாத்துருத்தி’ என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியை கதைக் களமாக கொண்டுதான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன்.
நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும்தான் படத்தின் கதை.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும்வகையிலும் ‘களரி’ உருவாகியிருக்கிறது…” என்றார்.