2012-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் ‘கலகலப்பு’.
முழுக்க, முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப் படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. இப்போது இந்த ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.
‘கிரி’, ‘ரெண்டு’, ‘தலைநகரம்’, ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை-2’, ‘ஐந்தாம் படை’ மற்றும் ‘மீசைய முறுக்கு’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்த நடிகை குஷ்பு சுந்தரின் ‘அவ்னி சினி மேக்ஸ்’ நிறுவனம் தற்போது ‘கலகலப்பு -2’ படத்தை தயாரித்து வருகிறது.
‘கலகலப்பு-2’-ம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, வி.டி.வி. கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
எழுத்து – இயக்கம் – சுந்தர். C., திரைக்கதை – வேங்கட்ராகவன், தயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர், ஒளிப்பதிவு – U.K.S., வசனம் – பத்ரி, இசை – ஹிப் ஹாப் ஆதி, பாடல்கள் – மோகன் ராஜ், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், கலை இயக்கம் –பொன்ராஜ், சண்டை பயிற்சி – தினேஷ், நடனம் – ஷோபி, பிருந்தா, ஒப்பனை –செல்லத்துரை, ஆடை வடிவமைப்பு – ராஜேந்திரன், பாலு, ஸ்டில்ஸ் – V. ராஜன், தயாரிப்பு மேற்பார்வை – பால கோபி, நிர்வாக தயாரிப்பு – A .அன்பு ராஜா.
இப்படம் பற்றிய அறிவிப்பை படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4–ம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்றது.
இப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இன்று காசியில் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தற்போது இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.









